7 பேரை ஏமாற்றி திருமணம்… மனைவி மீது போலீசில் கணவர் புகார்… அபாண்டம் என்கிறார் மனைவி
தேனி: டாக்டருக்கு படித்துள்ளதாகக் கூறி பல நபர்களை ஏமாற்றி திருமணம் செய்ததாக மனைவி மீது போடியைச் சேர்ந்த மென் பொறியாளர் ஒருவர் போலீசில் புகார் செய்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. என்மீது அபாண்டமாக குற்றம் சொல்லிய அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனைவியும் போலீசில் புகார் அளித்தார். கணவனும் மனைவியும் மாறி மாறி புகார் அளித்துள்ள இந்த வழக்கை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் வசிப்பவர் பாண்டி. இவரது மனவி அனுஷா, 24. இருவரும் பேஸ்புக் மூலம் அறிமுகமாகி, காதலித்து திருமணம் செய்தவர்கள். இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, சிறிதுகாலமாக பிரிந்து வாழ்ந்தனர். கணவரை சந்திக்க போடிக்கு வந்தார் மனைவி அனுஷா.
இந்நிலையில், போடி காவல்நிலையத்தில் மனைவி அனுஷா மீது புகார் கொடுத்தார் கணவர் பாண்டி. அதில், தான் அமெரிக்காவில் வசித்தபோது, சென்னை ராமச்சந்திரா மருத்துவமனை டாக்டர் என்று கூறி பேஸ்புக் மூலம் அனுஷா அறிமுகமானார்.
தொடர்ந்து இருவரும் காதலித்தோம், திருமணம் செய்யலாம் என்றவுடன், தான் கரூர் எம்.பி. சின்னசாமியின் மகள். திருமணத்துக்கு ஒத்துக்கொள்ள மாட்டார்கள். திருமணம் செய்வோம். குழந்தை பிறந்தால் பிரச்சினை தீர்ந்து விடும் என்று கூறினார்.
இதையடுத்து நவம்பர் 22 ல் வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் திருமணம் செய்து கொண்டு, சென்னையில் வசித்து வந்தோம். அதன் பின் அனுஷா பல்வேறு காரணங்களை கூறி என்னிடம் ரூ. 15 லட்சம் வரை வாங்கியுள்ளார்.
இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக போடிக்கு வந்துவிட்டேன். கடந்த வாரம் அனுஷாவின் உறவினர்கள் எனக் கூறி கரூரை சேர்ந்த ரகுபதி, வினோத், பாபு, சரவணன் ஆகியோர் போடிக்கு வந்து என்னையும், குடும்பத்தினரையும் மிரட்டினர்.
மிரட்டிய நபர்கள் குறித்து விசாரித்ததில் அனுஷா விருதுநகர் மாவட்டம், அருப்புகோட்டையை சேர்ந்த பாண்டி தீபன், திருச்சியை சேர்ந்த முருகன் என்பவரையும் காதலிப்பதாக கூறி அவர்களிடம் செலவுக்கு பணம் கேட்டு மிரட்டியதாக, திருச்சி கோட்டை மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. என்னையும் ஏமாற்றி திருமணம் செய்து, பணம் மோசடி செய்த அனுஷா மீதும் கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து அனுஷாவை போலீசார் விசாரித்தபோது, பாண்டியை திருமணம் செய்தது உண்மை. ஆனால் பல திருமணம் செய்தவள் என்று அவர் கூறுவது பொய். என்மீது அபாண்டமாக குற்றம் சொல்லிய அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தார். இருவரது புகார்களையும் பதிவு செய்த போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.