நிறையப் படிங்க, தேர்ந்தெடுத்துப் படிங்க.. மாணவர்களுக்கு தேனம்மை லக்ஷ்மணன் அட்வைஸ்
காரைக்குடி: காரைக்குடியில் நடந்த உலக புத்தக தின விழாவில் கலந்து கொண்டு பேசிய எழுத்தாளர் தேனம்மை லக்ஷ்மணன், மாணவர்களை நிறையப் படிக்குமாறு அறிவுரை வழங்கினார்.
ஏப்ரல் 23 அன்று உலக புத்தக தினம் கொண்டாடப்படுகிறது. உலக புத்தக தினத்தை கொண்டாடும் வகையில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் 6ம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு இன்று (20.04.2017) புத்தகம் வழங்கும் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
விழவிற்கு தலைமையாசிரியர் ஆ. பீட்டர் ராஜா அவர்கள் தலைமையேற்றார். பட்டதாரி ஆசிரியர் விஜயலெட்சுமி அவர்கள் அனைவரையும் வரவேற்றார். கவிஞர், எழுத்தாளர், வலைபதிவர், சுதந்திரப் பத்திரிகையாளர் என பல்வேறு அடையாளங்களை தன்னகத்தே கொண்டுள்ள தேனம்மை லக்ஷ்மணன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கி சிறப்புரை ஆற்றினர்.
நிறைய வாசிங்க
அவர் தனது உரையில் மாணவர்கள் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும், புத்தகங்களை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். கதை, கட்டுரை எழுதும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் போன்ற அறிவுரைகளை மாணவர்களுக்கு வழங்கினார்.
படிக்கும் ஆர்வம்
மேலும் அவர் பள்ளி நூலகத்துக்கு புத்தகங்களை வழங்கி மாணவர்களின் படிக்கும் ஆர்வத்தை ஊக்கப்படுத்தினார். தலைமையாசிரியர் அவர்கள் பேசுகையில், மாணவர்கள் விடுமுறையில் இப்புத்தகங்களை படித்து பயன் பெற வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
கோடைகால விடுமுறையில் படிக்க
மாணவர்கள் புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் பட்டதாரி ஆசிரியர் கோமதி ஜெயம் அவர்கள் ஒவ்வொரு மாணவரும் பயன்பெறும் வகையில் கோடை கால விடுமுறையில் மாணவர்கள் படிக்க ஏதுவாக, மாணவர்களுக்கு பிடித்தமான தலைப்புகளைப் பரிந்துரைத்தார்.
அந்தோணியின் ஆட்டுக்குட்டி
உழைப்பால் உயர்வோம், அந்தோணியின் ஆட்டுக்குட்டி, பஞ்சதந்திர கதைகள், திருக்குறள் கட்டுரைகள், திருவள்ளுவர் வாக்கும் வள்ளல் அழகப்பர் வாழ்வும், வேடிக்கைக் கதைகள், மரியாதை ராமன் கதைகள், சிந்து பாதின் அதிசய பயணங்கள், எங்கும் அறிவொளி, பிரமிட் தேசம், தலைவர்களின் வாழ்கை வரலாறை அறியும் வகையில் அன்னை தெரசா, பெரியார் பற்றிய நாட்டுக்கு உழைத்த நல்லவர் போன்ற நூல்களை வழங்கினார்.
பகிர்ந்து படியுங்கள்
பல்வேறு தலைப்புகளின் கீழ் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளதால், மாணவர்கள் புத்தகங்களை பகிர்ந்து படித்தால், அனைத்து நூல்களிலும் உள்ள கருத்தக்களை மாணவர்கள் அறிய முடியும். பட்டதாரி ஆசிரியர் சித்ரா அவர்கள் நன்றி கூறினார். பட்டதாரி ஆசிரியர் கோமதி அவர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.