சோனியா சோனியா சொக்க வைக்கும் சோனியா காதலில் நீ எந்த வகை கூறு...!
காதலர் தினம் இன்று கொண்டாடப்படும் வேளையில் காதலில் மொத்தம் எத்தனை வகைகள் உள்ளன என்பது தெரியுமா?
Recommended Video
சென்னை: காதல் என்பது டீன் ஏஜ் காதல், பெற்றோர் பார்த்த பெண்ணை திருமணம் செய்யும் சந்தோஷமாக வாழவைக்கும் ஆணின் காதல், பெற்றோர் பார்த்த ஆணை திருமணம் செய்து அவர் மீதான காதலால் தாய் வீட்டுக்கு நற்பெயர் வாங்கி தருவது என காதலை 3 வகைகளாக நாம் பிரிக்கலாம்.
உலகம் முழுவதும் பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இதை காதலர்கள் மட்டுமே கொண்டாட வேண்டுமா என்ன, பெற்றோர் பார்த்து திருமணம் செய்து கொண்டு நல்ல முறையில் இல்லறம் நடத்துவதும் காதல்தான் என்பதால் அவர்களும் கொண்டாடலாம்.
இன்றைய சமுதாயத்தில் காதலில் வெற்றி பெறுபவர்களை காட்டிலும் ஏமாறுபவர்களே அதிகமாகும். இது திருமணத்துக்கு முன் காதலிப்பவர்களும் திருமணத்துக்கு பின் (மனைவியை, கணவனை) காதலித்து வருபவர்களுக்கும் பொருந்தும்.
காதலில் எந்த வகை?
ரட்சகன் படத்தில் ஒரு பாடலில் சோனியா சோனியா சொக்க வைக்கும் சோனியா காதலில் நீ எந்த வகை கூறு, காதலில் 2 வகை சைவம் ஒன்று அசைவம் ஒன்று, இரண்டில் நீ எந்த வகை கூறு... என்று வரிகள் வரும். இதன் அர்த்தம் கண்டிப்பாக அனைவருக்கும் தெரியும். ஆனால் உண்மையில் காதலில் 3 வகைகள் உள்ளன. முதல் வகை டீன் ஏஜில் ஏற்படும் காதல்.
முதல் வகை
டீன் ஏஜில் ஹார்மோன் மாற்றங்களால் ஆணுக்கோ பெண்ணுக்கோ காதல் ஏற்படுவது இயற்கை. அது அவர் மேற்படிப்புக்கு செல்லும் போதோ அல்லது வேலைக்கு செல்லும்போதோ பகல் கனவு போல் கலைந்து விடும். இதுபோன்ற காதல்கள் வெற்றி பெறாது. சில காதல்கள் தனிமையில் சந்திப்பது என்ற நிலைக்குப் போய் விரீதத்தில் முடிவதும் உண்டு. ஆனால் டீன் ஏஜிலும் தங்கள் காதலை உண்மையாக்க வேண்டும் என்றால் நல்ல நிலையை அடையும் வரை பொறுமை காப்பது நல்லது. இதனால் பெற்றவர்களுக்கும் பெருமை. வாழ்க்கையும் நல்ல புரிதலுடன் தொடங்கப்படும்.
இரண்டாவது வகை
இரண்டாவது வகை எல்கேஜி சீட்டுக்கே நல்ல ஸ்கூல் என்று தெரிந்து கொண்டு காலை 10 மணிக்கு கொடுக்கப்படும் விண்ணப்பத்தை பெற முதல் நாள் இரவு 10 மணிக்கே வந்து காத்திருப்பது, மகனின் சிறு வயதில் இருந்து என்ன டிரஸ் போட்டால் நன்றாக இருக்கும், என்ன படித்தால் நல்ல வேலை கிடைக்கும் என்று பார்த்து பார்த்து செய்யும் பெற்றோருக்கு நல்ல வாழ்க்கை துணையையும் அமைக்க தெரியும் என்று எண்ணி அவர்கள் பார்த்த பெண்ணை திருமணம் செய்து கொண்டு காதலிப்பது. தன்னை நம்பி வந்த பெண்ணின் மனம் கோணாமலும், தன் பெற்றோரின் மன மகிழும்படியாகவும் செய்வதும் காதல்தான். இது ஒரு வகை.
மூன்றாவது வகை
மூன்றாவது வகை தன்னை திருமணம் செய்து கொண்ட கணவனை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என்று நினைத்து செயல்படுவதும் மனைவியின் காதல் ஆகும். மாமனார், மாமியாரின் விருப்பத்திற்கேற்ப நடந்து கொள்ள வேண்டும் என்று மனதில் நிலை நிறுத்திக் கொண்டு குடும்பத்தை தாங்கிப் பிடிக்கும் மனைவியின் தியாகத்தை புரிந்து கொண்டு அவளுக்கு உண்மையான அன்பை கொடுப்பது கணவனின் காதலாகும்.
காதலைப் புரிந்து கொண்டு வாழுங்கள்
டீன் ஏஜில் வரும் காதல் பெரும்பாலும் தனிமையில் சந்திப்பதுடன் முடிந்து விட்டு அவரவர் தன் வேலை பார்க்க சென்றுவிடுவர். இதில் உண்மையாக காதலித்த ஆணுக்கோ பெண்ணுக்கோ வேதனை அதிகம். இரண்டாவது வகையில் தவறான பழக்க வழக்கத்தால் மனைவியின் மனம் புண்படும் படி நடந்து கொள்வது, பணத்தாசை உள்ளிட்டவற்றால் பெண்ணை சித்ரவதை செய்து கடைசியில் விவாகரத்தில் முடிவது. மூன்றாவது வகையில் தலை குனிந்து நடக்க வேண்டிய பெண்கள் தலைகணத்துடன் நடப்பதால் ஏற்படும் குழப்பங்களால் கோர்ட் படி ஏறும் நிலை ஏற்படுகிறது. காதலை நன்கு புரிந்து கொண்டு தன் தலையில் தானே மண் அள்ளிக் கொட்டாமல் ஜெயிக்க கற்றுக் கொள்ள வேண்டும். இதை எண்ணிதான் பெற்றோர் காதல் திருமணத்துக்கு நோ சொல்கின்றனர் என்பதை புரிந்து கொண்டு அவர்களுக்கு உங்கள் காதலை புரிய வைக்க வேண்டும்.