போராட்டம், போர்க் கொடி என ஆக்ஷன் கலந்த ஆண்டாக இருந்து விடைபெறும் 2017- பிளாஷ்பேக்
தமிழக அரசியலில் இந்த ஆண்டு ஆக்ஷன் கலந்த ஆண்டாக இருந்து விடைபெற இன்னும் இரு நாட்களே உள்ளன.
சென்னை: தமிழக அரசியலை பொருத்தவரை பெரிய போராட்டங்கள், போர்க்கொடிகள் என இந்த ஆண்டு ஆக்ஷன் கலந்த ஆண்டாக இருந்து ஓய்வு பெறும் நிலையில் அந்த ஆண்டில் நடந்தவற்றை ஒரு அலசல்.
ஒவ்வொரு ஆண்டும் முடியும் தருவாயில் அந்த ஆண்டில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் குறித்த நினைவுகளை நாம் அசைபோடுவது வழக்கம். கடந்த ஆண்டு ஜெயலலிதா மறைவு என சோகத்துடன் 2016 முடிவடைந்தது.
ஆனால் இந்த ஆண்டு ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, தமிழகம் ஆக்ஷன் கலந்த ஆண்டாக இருந்துள்ளது. இந்த ஆண்டில் பெரிய போராட்டங்கள் முதல் போர்க் கொடி முதல் பரபரப்புக்கு பஞ்சமில்லாத ஆண்டாகவே உள்ளது. அவற்றில் மிக முக்கியமாக நடந்த 9 நிகழ்வுகள் குறித்து பார்ப்போம்.
ஜல்லிக்கட்டு... ஜல்லிக்கட்டு...
ஜல்லிக்கட்டு எனும் பாரம்பரிய வீர விளையாட்டு போட்டிகள் என்ற பெயரில் காளைகளை துன்புறுத்துவதாக கூறி கடந்த 2014-ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது. இதையடுத்து ஜல்லிக்கட்டு போட்டி நடத்தியே தீர வேண்டும் என்று அலங்காநல்லூரில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அவர்களுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் ஜன 17-ஆம் தேதி லட்சக்கணக்கான இளைஞர்கள் திரண்டு மாபெரும் போராட்டத்தை நடத்தினர். இதன் மூலம் ஜல்லிகட்டுக்கு அவசர சட்டமும் பிறப்பிக்கப்பட்டது. எனவே இந்த ஆண்டே தமிழகத்தில் மாபெரும் போராட்டத்துடன்தான் தொடங்கியது.
கருணாநிதி உடல்நலம் குறித்து வதந்தி
கடந்த இரு ஆண்டுகளாக கருணாநிதி உடல் நிலை பாதிப்பு காரணமாக கட்சியிலோ அல்லது நிகழ்ச்சிகளிலோ நேரடியாக கலந்து கொள்ளவில்லை. இதனால் அவரது உடல்நலம் மோசமடைந்துள்ளதாக பல்வேறு வதந்திகளும் பரவின. இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் திமுகவின் பொதுக் குழு கூட்டம் கூடி மு.க.ஸ்டாலினை திமுக செயல்தலைவராக நியமித்தது. கடந்த 2013-ஆம் ஆண்டு ஸ்டாலினை தனது அரசியல் வாரிசாக கருணாநிதி அறிவித்துக் கொண்டாலும் இந்த நியமனம் என்பது அதிகாரப்பூர்வமாகவே கருதப்படுகிறது. இதன் மூலம் அவர் முதல்வர் வேட்பாளர் என்ற அந்தஸ்தையும் பெறுகிறார்.
ஜெ.சமாதியில் தியானம்
ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி மறைந்த சிறிது நேரத்தில் தமிழகத்தின் முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் பதவியேற்றுக் கொண்டார். டிசம்பர் மாதம் சென்னையை தாக்கிய வர்தா புயலின் போது ஓபிஎஸ் சிறப்பாக செயல்பட்டது சசிகலாவை ஆத்திரமடையச் செய்ததாக கூறப்பட்டது. முதல்வர் பதவியில் சசிகலா அமர அவருக்கு வழி ஏற்படுத்துவதற்காக 2 மாதங்கள் கழித்து அப்பதவியை ராஜினாமா செய்தார். இவரது ராஜினாமாவை ஆளுநர் ஏற்றுக் கொண்டு அடுத்தவரை நியமிக்கும் வரை பொறுப்பு முதல்வராக இருக்க ஓபிஎஸ்ஸுக்கு அறிவுறுத்தினார். கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதி மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதியில் ஓபிஎஸ் தியானம் செய்து பரபரப்பை கிளப்பினார். அதிமுக இரண்டாக பிளவுப்பட்டது. இதன் மூலம் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தனி பேரவை தொடங்கினார். சசிகலாவின் உறவினர் டிடிவி தினகரன் சுயேச்சையாக ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டார்.
பெங்களூர் சிறை சென்ற சசி
கடந்த 1991-96-ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சி காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, தினகரன், இளவரசி ஆகியோருக்கு பெங்களூர் நீதிமன்றம் கடந்த 2014-ஆம் ஆண்டு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து ஜெயலலிதா கடந்த ஆண்டு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அதில் பெங்களூர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது. இதையடுத்து ஜெயலலிதா மறைந்துவிட்டதால் ஏனைய மூவர் சிறை செல்ல நேரிட்டது. ஒரு முதல்வர் மீது ஊழல் கறை படிய முக்கிய காரணமாக இந்த வழக்கு விளங்கியது.
அதிமுகவை சேர்த்து வைத்த பாஜக
பிளவுப்பட்டிருந்த அதிமுகவை சேர்த்து வைத்ததில் பெரும் பங்கு பாஜகவுக்கு உண்டு. அதேபோல் சசிகலாவின் உறவினர்களின் வீடுகளில் வருமான வரித் துறையினர் ரெய்டு நடத்தினர். தமிழகத்தில் கால் ஊன்ற மத்திய அரசு சில செயல்களை செய்தது. தமிழகத்தில் திராவிட கட்சிகளை ஓரங்கட்டிவிட்டு பாஜகவின் தாமரையை துளிர்க்க விடலாம் என்பது பாஜகவின் தமிழிசை மற்றும் எச்.ராஜா உள்ளிட்டோரின் முயற்சியாக இருந்தது. ஆனால் அதற்கான பதிலை ஆர்கே நகர் இடைத்தேர்தலில் நோட்டாவை காட்டிலும் இவர்கள் பெற்ற குறைவான வாக்குகளே காட்டியுள்ளது.
அரியலூர் அனிதா தற்கொலை
நாடு முழுவதும் ஒரே மாதிரியான மருத்துவ சேர்க்கைக்கு வழி வகுக்கும் தேசிய தகுதிகாண் தேர்வு எனப்படும் நீட் தேர்வை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதற்கு தமிழகத்தில் எதிர்ப்பு வலுத்தது. எனினும் மத்திய அரசு திணித்ததன் காரணமாகவும் நீட் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவு காரணமாகவும் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் மட்டுமல்லாது வெளிநாடு வாழ் இந்தியர்களையும் உலுக்கியது.
20 வினாடிகள் கொண்ட வீடியோ
ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சை பெற்றபோது அவரை பார்க்க யாருக்கும் அனுமதியில்லை என்ற நிலையில் அவரது மரணம் மர்ம மரணம் என பேசப்பட்டது. இதை பொய் என்று நிரூபிக்க ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சை பெற்ற வீடியோ என்று கூறி தினகரன் ஆதரவாளர் கடந்த 20-ஆம் தேதி ஒரு வீடியோவை வெளியிட்டார். சுமார் 20 வினாடிகள் கொண்ட அந்த வீடியோவில் ஜெயலலிதா ஜூஸ் குடித்துக் கொண்டே டிவி பார்ப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இந்த வீடியோ விவகாரம் பக்கா தனிப்பட்ட உரிமை மீறல் என கூறப்பட்டது.
குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுதலை
முந்தைய காங்கிரஸ் அரசில் மத்திய தொலைத் தொடர்பு துறை அமைச்சராக ஆ.ராசா இருந்தபோது அவர் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததாக அவர், திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி உள்ளிட்ட 14 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கை சுமார் 6 ஆண்டுகளாக விசாரித்து வந்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம் குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி அனைவரையும் விடுவித்தது. இதன் மூலம் இந்திய வரலாற்றிலேயே இமாலய ஊழல் என கூறப்பட்ட வழக்கு ஒன்றுமில்லாமல் ஆக்கப்பட்டது.
தினகரன் அபார வெற்றி
பணப்பட்டுவாடா தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்ட ஆர்கே நகர் இடைத்தேர்தல் ரத்துசெய்யப்பட்டு கடந்த 21-ஆம் தேதி நடைபெற்றது. அதில் சுயேச்சையாக போட்டியிட்ட தினகரன் 89,013 வாக்குகள் பெற்று அதிமுக, திமுக ஆகிய கட்சிகளை தோற்கடித்து அபாரமாக வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் 59 வேட்பாளர்களில் தினகரன் அதிமுக வேட்பாளர் மதுசூதனன் ஆகியோர் தவிர மீதமுள்ள 57 பேரும் டெபாசிட் இழந்தனர்.