தேச பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் வி.வி மினரல்ஸ் மீது ஏன் நடவடிக்கை இல்லை? ஸ்டாலின் கேள்வி
சென்னை: நாட்டின் பாதுகாப்பிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் தாது மணல் கொள்ளை குறித்து விசாரணை செய்ய மத்திய அரசு ஏன் இதுவரை அக்கறை காட்டவில்லை என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து ஸ்டாலின் கூறியுள்ளதாவது: தாது மணல் கொள்ளை குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று திமுக சார்பில் ஏற்கனவே கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதவிற்கு மிகவும் நெருங்கிய தொடர்பு உள்ள வி.வி.மினரல்ஸ் கம்பெனியின் 1,00,000 கோடி ரூபாய் முறைகேட்டுப் புகார் தொடர்பாக கவனிக்கப்பட வேண்டிய மேலும் சில அவசர விவகாரங்கள் இருக்கின்றன.
இது ஒரு மெகா ஊழல் என்பது ஒருபுறமிருக்க, சட்டவிரோதமாக லாபம் அடைவதற்காக அணுசக்தி எரிபொருட்களை பிரித்தெடுக்கப் பயன்படும் மோனோசைட் போன்ற கனிமப் பொருட்களை ஏற்றுமதி செய்ததில் தேசிய பாதுகாப்பு கைகழுவப்பட்டுள்ளதோ என்ற சந்தேகம் எழுகிறது.
இந்திய சட்டங்களின் படி கதிரியக்கத்திற்குப் பயன்படும் கனிமப் பொருட்களை சுரங்கங்களில் இருந்து தனியார் பிரித்து எடுக்கவோ, கையாளவோ கூடாது என்ற விதிமுறைகள் மீறப்பட்டு, மோனோசைட்டை இந்த தனியார் கம்பெனி எடுத்தது மட்டுமின்றி, பெயர் கூறப்படாத நாடுகளுக்கு எல்லாம் ஏற்றுமதியும் செய்திருக்கிறது.
ஆகவே இது பற்றி உடனடியாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்திரவிட வேண்டும். மிகப் பெரிய முறைகேடு நடைபெற்றிருக்கிறது என்று வெளியில் தெரிய வந்த பிறகும் நடவடிக்கை ஏதும் எடுக்காமல் பாஜக தலைமையில் உள்ள மத்திய அரசு ஏன் அமைதி காக்கிறது? அதிலும் முக்கியமாக, இந்த ஏற்றுமதி விவகாரம் நாட்டின் பாதுகாப்பிற்கு மிகப் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று தெரிந்த பிறகும் இந்த முறைகேடு குறித்து விசாரணை செய்ய மத்திய அரசு ஏன் இதுவரை அக்கறை காட்டவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.