தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு.. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்.. வானிலை மையம் வார்னிங்!
சென்னை: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ள வானிலை மையம் மீனவர்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென் தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று விடிய விடிய கனமழை பெய்தது.
நெல்லை மாவட்டத்தில் மட்டும் நேற்று 264 மிமீ மழை பதிவாகியுள்ளது. இதேபோல் தூத்துக்குடி மாவட்டத்திலும் மழை வெளுத்து வாங்கியது. விடிய விடிய மழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் மீண்டும் தண்ணீர் சூழ்ந்தது.
மிதமான மழை
இந்நிலையில் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
எச்சரிக்கை
மேலும் அரபிக்கடலில் 40 முதல் 50 கிமீ வரை சூறைக்காற்று வீசும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு மீனவர்கள் அரபிக்கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
காயல்பட்டினம்
கடந்த 24 மணிநேரத்தில் அதிகளவாக தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் ஒரு சென்டி மீட்டர் மழை பதிவாகியிருப்பதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னையில் மேகமூட்டம்
இதனிடையே சென்னையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. சென்னையில் அவ்வப்போது குளிர்ச்சியான காற்றும் வீசி வருகிறது.