அக். 15க்கு பிறகு வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பாம்.. தொடங்கிரும்ல??
அக்டோபர் 15 ஆம் தேதிக்கு பிறகு வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: அக்டோபர் 15 ஆம் தேதிக்கு பிறகு வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மத்திய வங்கக்கடல் பகுதியில் உருவான டிட்லி புயல் இன்று அதிகாலை ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திரா பகுதியில் கரையை கடந்தது. இதன்காரணமாக இரு மாநிலங்களிலும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இன்று அதிகாலை ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திரா பகுதியில் கரையை கடந்த அதி தீவிர டிட்லி புயலானது தற்போது தீவிர புயலாக மேற்கு வங்கம் மற்றும் கங்கை சமவெளி பகுதியில் நிலை கொண்டுள்ளது.
இது அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறையும்.
மேலும் இந்த புயலால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பில்லை.
இதனிடையே வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அக்டோபர் 15ஆம் தேதிக்கு பிறகு வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது.
[ சிலைகடத்தல் வழக்கு.. தமிழக அரசு மீது சென்னை ஹைகோர்ட் அதிருப்தி.. சரமாரி கேள்வி!! ]
கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை நாகர்கோவிலில் 5 செ.மீ, அரியலூர், திருவள்ளூர், முத்துப்பேட்டை, தஞ்சை, மதுக்கூர் பகுதிகளில் 3 செ.மீ மழை பதிவாகியுள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.