சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடும் பனி மூட்டம்.. வாகன ஓட்டிகள் அவதி.. விமானங்கள் ரத்து!
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடுமையான பனி மூட்டம் நிலவி வருகிறது.
Recommended Video
சென்னை: புறநகர் பகுதிகளில் கடுமையான பனி மூட்டம் நிலவி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்துள்ளனர். சென்னை வரும் 12 விமானங்கள் பனி மூட்டத்தால் திருப்பிவிடப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் வடகிழக்குப் பருவ மழை தொடங்கியது. இதனை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தில் தொடக்கத்தில் சில நாட்கள் மழை பெய்தது.
பின்னர் வடகிழக்குப் பருவமழை ஓய்வு எடுத்து வருகிறது. இதனிடையே சென்னை உள்ளிட்ட இடங்களில் பனிப்பொழிவு தொடங்கியுள்ளது.
|
கடுமையான பனிமூட்டம்
இதன் காரணமாக அதிகாலை நேரங்களில் குளிர் நிலவி வருகின்றது. இந்நிலையில் இன்று கடுமையான பனிமூட்டம் நீடிக்கிறது.
சென்னையில் பனிமூட்டம்
சென்னை வளசரவாக்கம், போரூர், ராமாபுரம் மற்றும் புறநகர் பகுதிகளான தாம்பரம் அருகே பொத்தேரி, மறைமலைநகர், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பனிமூட்டம் நிலவியது.
வாகன ஓட்டிகள் அவதி
பனி மூட்டம் காரணமாக ஜி.எஸ்.டி சாலை உள்ளிட்ட சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர். பனிமூட்டத்தால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் விடிந்த பின்னரும் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டப்படி செல்கின்றனர்.
திருப்பிவிடப்பட்ட விமானங்கள்
கடும் பனிமூட்டத்தால் சென்னையில் தரையிறங்க முடியாமல் சில விமானங்கள் பெங்களூரு திருப்பி விடப்பட்டன. பனிமூட்டம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய மஸ்கட், மொரீசியஸ் விமானங்கள் பெங்களூருவுக்கு திருப்பிவிடப்பட்டன.
12 விமானங்கள் தாமதம்
லண்டனிலிருந்து சென்னை வரும் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் இருந்து செல்லும் 12 விமானங்களின் புறப்பாடு தாமதமாகியுள்ளது.
டெல்லியை போல்..
காலை 9 மணியை தாண்டியும் பனிமூட்டம் நீடித்ததால் மக்கள் பெரும் அவதியடைந்தனர். சென்னை நகரின் பல இடங்களிலும் நீடித்த பனிமூட்டத்தால் சென்னை டெல்லியை போன்று இருப்பதாக சமூகவலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.