நீட் தேர்வை புறந்தள்ள வாய்ப்பே இல்லை.. அடித்து சொல்கிறார் தமிழிசை!
நீட் தேர்வை மாற்றவே முடியாது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை: நீட் தேர்வை மாற்றவே முடியாது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில் தோல்வியடைந்ததால் விழுப்புரம் மாவட்டம் பெருவளூரைச் சேர்ந்த பிரதீபா என்ற மாணவி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் உள்ள பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.
அவர் பேசியதாவது எம்.பி.பி.எஸ்ஸில் இடம் கிடைக்கவில்லை என்றால் வேறு வாய்ப்பு உள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுபடியே நீட் தேர்வு நடத்தப்படுகிறது.
நீட் தேர்வு குறித்து தமிழக தலைவர்கள் தங்களது கருத்துகளை மாற்றிக் கொள்ள வேண்டும். நீட் தேர்வு ரத்து செய்யப்பட வாய்ப்பே இல்லை, அரசியல் தலைவர்கள் மாணவர்களை ஏமாற்ற வேண்டாம்.
உயிரை காப்பாற்ற மருத்துவம் படிக்க நினைக்கும் மாணவர்கள் தோல்வியால் உயிரை இழக்கக்கூடாது. நீட் தேர்வை பொருத்தவரை நேர்மறையாக எண்ண வேண்டும். இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.