உள்ளாட்சி தேர்தலுக்கும் மாவட்டங்களை பிரிப்பதற்கும் தொடர்பா? என்ன பின்னணி?.. முதல்வர் விளக்கம்!
உள்ளாட்சி தேர்தலுக்கும் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதற்கும் தொடர்பில்லை என்று தென்காசியில் முதல்வர் பழனிசாமி மக்கள் முன்னிலையில் பேசி உள்ளார்.
தென்காசி: உள்ளாட்சி தேர்தலுக்கும் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதற்கும் தொடர்பில்லை என்று தென்காசியில் முதல்வர் பழனிசாமி மக்கள் முன்னிலையில் பேசி உள்ளார்.
தமிழகத்தில் வரிசையாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக தமிழகத்தில் 33- வது மாவட்டமாக தென்காசி மாவட்டம் உதயமாகியுள்ளது.
நெல்லையில் இருந்து புதியதாக உருவாக்கப்பட்ட தென்காசி மாவட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்று நேரில் தொடங்கி வைத்தார். இதையடுத்து தென்காசியில் மக்கள் முன்னிலையில் முதல்வர் பழனிசாமி பேசினார். உள்ளாட்சி தேர்தல் குறித்து முதல்வர் பழனிசாமி இதில் பேசினார்.
உதயமானது தென்காசி மாவட்டம்.. கோலாகல விழா.. தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
தேர்தல் நடைபெறுகிறது
முதல்வர் பழனிசாமி தனது பேச்சில், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. உள்ளாட்சி தேர்தலுக்கும் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதற்கும் தொடர்பில்லை. உள்ளாட்சி தேர்தலுக்கு சிலர் முட்டுக்கட்டை போட முயல்கிறார்கள் எப்படியாவது உள்ளாட்சி தேர்தலை நிறுத்த வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
கனவு பலிக்காது
அவர்களின் கனவு ஒரு போதும் பலிக்காது. என்ன நடந்தாலும் உள்ளாட்சி தேர்தல் நடக்கும். சட்டசபை இடைத்தேர்தல் போல உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக கூட்டணியே வெற்றி பெறும். அதிக அளவில் மேயர் பதவியை அதிமுக கூட்டணி வெல்லும்.
புதிய மாவட்டம்
புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டால் எளிதாக வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த முடியும். மக்களுக்கு நலத்திட்டங்கள் எளிதாக சென்று சேரும். இதனால் புதிய மாவட்டங்கள் பிரிப்பதை மக்களும் வரவேற்கிறார்கள். மக்களின் கோரிக்கைப்படி நெல்லையில் இருந்து பிரித்து தென்காசி மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
அதிமுக ஆதரவு
அதிமுக ஆட்சிக்கு மக்கள் ஆதரவு வழங்கி வருகிறார்கள். தண்ணீர் பிரச்சனை தொடங்கி மின்சார பிரச்சனை வரை எல்லாமும் சரியாகி உள்ளது. திமுக கட்சியும் அவர்களுடன் கூட்டணி வைத்து இருப்பவர்களும் இந்த உள்ளாட்சி தேர்தலோடு காணாமல் போவார்கள், என்று முதல்வர் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.