ஐடி ரெய்டுக்கும் தமிழக அரசுக்கும் தொடர்பு இல்லை... அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்
தமிழ்நாட்டில் நடக்கும் ஐடி ரெய்டுக்கும், தமிழக அரசுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழ்நாட்டில் நடக்கும் ஐடி ரெய்டுக்கும், தமிழக அரசுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
தமிழ்நாடு முழுக்க மொத்தம் சசிகலா குடும்பத்தின் 190 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர். சசிகலாவின் குடும்பத்தினர் மற்றும் அவருக்கு நெருக்கமான சொந்தங்கள் அனைவரது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையில் மொத்தம் 2,000 அதிகாரிகள் ஈடுபட்டனர். பொதுவாக வருமான வரித்துறை சோதனையில் ரிசர்வ் போலீஸ் படையே பயன்படுத்தப்படும். ஆனால் இந்த சோதனையில் தமிழக போலீசே களத்தில் இறங்கியது.
இதையடுத்து தமிழக அரசும் இந்த சோதனைக்கு உடந்தையாக இருக்கிறதா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதிமுக கட்சி பிரச்னையில் பழி தீர்க்கும் விதமாக சோதனை நடைபெறுவதாக கூறப்பட்டது. தற்போது இந்த குற்றச்சாட்டை அமைச்சர் ஜெயக்குமார் மறுத்து இருக்கிறார்.
இன்று காலையில் அஸ்ஸாம் தலைநகர் குவஹாத்தி செலவதற்காக சென்னை விமான நிலையம் வந்த அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிக்கையாளர்களிடம் பேசினார். அப்போது ''தமிழ்நாட்டில் நடக்கும் ஐடி ரெய்டுக்கும், தமிழக அரசுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை.தேவையில்லாமல் இந்த பிரச்சனையில் அதிமுக அரசை இழுக்க வேண்டாம். வருமான வரித்துறைக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் ஐடி ரெய்டு நடைபெறுகிறது'' என்று கூறினார்.
நேற்று நடைபெற்ற இந்த ரெய்டு இன்றும் பல இடங்களில் தொடர்ந்து நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.