ஓபிஎஸ் தலைமையில் இயங்கும் அணியே உண்மையான அதிமுக.. மைத்ரேயன் பேட்டி
ஓபிஎஸ் சுற்றுப்பயணத்திற்கும் இரு அணிகள் இணைப்புக்கும் சம்பந்தம் இல்லை என்று மைத்ரேயன் எம்.பி. தெரிவித்தார்.
சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இயங்கும் அணியே உண்மையான அதிமுக என்பதை நிரூபிக்கும் வகையில் அவரது சுற்றுப்பயணம் அமையும் என்று மைத்ரேயன் எம்.பி.கூறியுள்ளார்.
அதிமுகவில் பிளவுபட்டுள்ள இரு அணிகள் இணைப்பு முயற்சிக்கான பேச்சுவார்த்தையை தொடங்குவதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. இரு அணியினரும் மாறு பட்ட கருத்துக்களை கூறி வருவதால் பேச்சுவார்த்தைக்கு இணக்கமான சூழல் உருவாகவில்லை.
ஓபிஎஸ் அணி விதிக்கும் நிபந்தனையை ஏற்க எடப்பாடி பழனிச்சாமி அணியினர் தயாராக இல்லை. அதே நேரத்தில் நிபந்தனை எதுவும் இன்றி பேச வந்தால் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம் என்று ஈபிஎஸ் தரப்பினர் கூறிவிட்டனர். இது மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழ்நிலையில் நாளை முதல் தமிழகம் முழுவதும் ஓ.பன்னீர்செல்வம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொண்டர்களை சந்திக்க உள்ளார்.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மைத்ரேயன் எம்.பி., கூறுகையில், இரு அணிகள் இணைப்புக்கும் ஓபிஎஸ் சுற்றுப்பயணத்துக்கும் சம்பந்தம் இல்லை . உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் ஓபிஎஸ் சுற்றுப்பயணம் இருக்கும்.
இந்த பயணத்தின்போது உள்ளாட்சி தேர்தல் குறித்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்களிடம் ஆலோசனை நடத்தப்படும். அப்போது ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இயங்கும் அணியே உண்மையான அதிமுக என்பதை நிரூபிக்கும் வகையில் அவரது சுற்றுப்பயணம் அமையும் என்றார்.