என்னாது "பாஸ் " கட்சியில் "அம்மா"வுக்கும் "சின்னம்மா"வுக்கும் இடமில்லையா!?
சென்னை: டிடிவி தினகரனின் தம்பியும் சசிகலாவின் அக்காள் வனிதாமணியின் மகனுமான டிடிவி பாஸ்கரன் தொடங்கவுள்ள கட்சியில் அண்ணா, எம்ஜிஆர் ஆகியோர் படங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. ஜெயலலிதாவின் படம் அதில் இடம்பெறவில்லை. இதனால் தொண்டர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
சசிகலாவின் அக்காள் வனிதாமணிக்கு இரு மகன்கள். ஒருவர் டிடிவி தினகரன் மற்றொருவர் டிடிவி பாஸ்கரன் ஆகியோராவர். ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் சசிகலா குடும்பமே நங்கூரம் பாய்ச்சி கொண்டு உட்கார்ந்திருந்தனர்.
அவர் மறைந்தவுடன் அவரது உடலை சுற்றி சசிகலாவின் குடும்பத்தினரே ஆக்கிரமித்திருந்தனர்.
ஓரங்கட்டப்பட்ட தினகரன்
இந்த நிலையில் சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது முதல் அவர் சிறைக்கு செல்லும் போது தினகரனை கழகத்தின் துணை பொதுச் செயலாளராக நியமித்தது வரை, இரண்டாக பிளவுப்பட்ட அதிமுக ஒன்றிணைந்தது முதல் தினகரன் ஓரங்கட்டப்பட்டது வரை அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
அமமுக கட்சி
ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்கே நகரில் போட்டியிட்டு எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார் தினகரன். இதைத் தொடர்ந்து ஜெயலலிதாவை முன்னிலைப்படுத்தி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற ஒரு கட்சியை தொடங்கினார். அதன் கொடியில் ஜெயலலிதாவின் படம் இடம்பெற்றுள்ளது.
அறிமுக விழா
இந்நிலையில் தினகரனுக்கு போட்டியாக அவரது தம்பி பாஸ்கரனும் ஒரு புதிய கட்சியை தொடங்கவுள்ளார். வரும் 30-ஆம் தேதி திருத்தணியில் கட்சியை தொடங்கவுள்ளார். அன்றைய தினம் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவியுடன் கட்சியின் பெயர் மற்றும் கொடி அறிமுக விழா நடைபெறுகிறது.
சின்னம்மா படம் இல்லை
அதற்கான ஒரு பேனர் வெளியாகியுள்ளது. அந்த பேனரில் எம்ஜிஆர் படமும் பாஸ்கரனில் படமும் இருபுறமும் உள்ளது. மேலே அண்ணா படமும் அதன் கீழ் தொண்டர்களுக்கு மத்தியில் பாஸ்கரன் இரு கைகளை உயர்த்துவது போன்ற படமும் உள்ளது. ஆனால் மருந்துக்குக் கூட ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் படங்களை அவர் பயன்படுத்தவில்லை. இதனால் இந்த கட்சி தாக்கு பிடிக்குமா இல்லையா என்பது தெரியாமல் தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர்.