கதிராமங்கலம் ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு ஏதும் இல்லை.. தஞ்சை ஆட்சியர் விளக்கம்!
கதிராமங்கலம் பகுதியில் ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு ஏதும் இல்லை என ஆட்சியர் அண்ணாதுரை விளக்கம் அளித்துள்ளார்.
கும்பகோணம்: கதிராமங்கலம் பகுதியில் ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு ஏதும் இல்லை என ஆட்சியர் அண்ணாதுரை விளக்கம் அளித்துள்ளார். குடிநீரில் மாசு கலந்து வருவது குறித்து ஆய்வு நடத்தப்படும் என்றும் ஆட்சியர் அண்ணாதுரை கூறினார்.
கும்பகோணத்தை அடுத்த கதிராமங்கலம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள ஓஎன்ஜிசி குழாய்களில் கடந்த 30ஆம் தேதி கசிவு ஏற்பட்டது. இதையடுத்து ஓஎன்ஜிசி பணிகளை நிறுத்தக்கோரி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது எண்ணெய் கசிவு ஏற்பட்ட இடத்தில் சிலர் தீ வைத்தனர். இதையடுத்து கிராம மக்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். பதிலுக்கு கிராம மக்களும் கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர்.
கிராம மக்கள் குற்றச்சாட்டு
இதனால் அப்பகுதியில் பெரும் களேபரம் ஏற்பட்டது. எண்ணெய் கசிவு ஏற்பட்ட இடத்தில் போலீசாரே தீ வைத்துவிட்டு மக்கள் மீது பழி போடுவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டினர்.
ஆட்சியர் ஆய்வு
இந்நிலையில் கதிராமங்கலம் பகுதியில் நேற்று மீண்டும் எண்ணெய் கசிவு ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை அப்பகுதியில் இன்று ஆய்வு செய்தார்.
எண்ணெய் கசிவு இல்லை
ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கதிராமங்கலம் பகுதியில் எண்ணெய் கசிவு ஏதும் ஏற்படவில்லை என்றார். மேலும், கதிராமங்கலத்தில் குடிநீரில் எண்ணெய் கலந்து வருவது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர் என்றும் அவர் கூறினார்.
பேச்சுவார்த்தை நடத்தப்படும்
மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் அவர் கூறினார். நேற்று முன்தினமே திருவிடைமருதூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கைது செய்யப்பட்டுள்ள 9 பேரையும் விடுவித்தால் தான் பேச்சுவார்த்தை என கிராம மக்கள் கூறியதால் பேச்சுவார்த்தை நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.