ஐஐடியில் சமஸ்கிருத பாடலை பாடியதில் தவறில்லை.. வரிந்து கட்டும் சுப்பிரமணிய சாமி!
சென்னை ஐஐடியில் சமஸ்கிருத பாடலை பாடியதில் தவறில்லை என சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார்.
சென்னை: சென்னை ஐஐடியில் சமஸ்கிருத பாடலை பாடியதில் தவறில்லை என சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார்.
சென்னை ஐஐடியில் நடைபெற்ற நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு பதிலாக மகா கணபதி என்ற சமஸ்கிருத பாடல் பாடப்பட்டது.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஐஐடியில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டு சமஸ்கிருத பாடல் பாடப்பட்டதற்கு பலரும் தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
ஐஐடியில் அவசியமில்லை
இந்நிலையில் பாஜக மூத்த தலைவரும் அக்கட்சியின் மூத்த தலைவருமான சுப்பிரமணிய சாமி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஐஐடியில் தமிழ்த்தாய் வாழ்த்து அவசியமில்லை என்றார்.
நாடாளுமன்றத்தில் தீர்மானம்
மேலும் மத்திய அரசின் நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டிய தேவையில்லை என்ற அவர், ஐஐடியில் சமஸ்கிருத பாடல் பாடியதில் தவறில்லை என்றார். நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிதான் ஐஐடி உருவாக்கப்பட்டது என்றும் சுப்பிரமணிய சாமி கூறினார்.
காவிரி நீர் கிடைக்காது
தமிழக அரசின் நிகழ்ச்சிகளில் தான் தமிழ்த்தாய் பாடப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். மேலும் தமிழகத்துக்கு காவிரி நீர் கிடைக்காது என்றும் சுப்பிரமணிய சாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மீண்டும் சர்ச்சை
அண்மையில் சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பங்கேற்ற விஜயேந்திரர் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காமல் இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஐஐடியில் சமஸ்டிகிருத பாடல் பாடப்பட்டிருப்பதும் அதனை பாஜக எம்பியான சுப்பிரமணிய சாமி வரிந்துகட்டி நியாயப்படுத்துவதும் சர்ச்சையை அதிகரித்துள்ளது.