கமல்ஹாசனை இயக்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை.. கனிமொழி பொளேர்!
சென்னை: நடிகர் கமல்ஹாசனை திமுக இயக்குவதாக கூறுவதில் உண்மை இல்லை எனவும் அவரை இயக்க வேண்டிய அவசியம் தி.மு.க.வுக்கு இல்லை என்றும் அக் கட்சியின் ராஜ்யசபா உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், அரசின் எல்லாத் துறைகளிலும் ஊழல் இருப்பதாகக் கூறியது பெரும் பரபரப்பை கிளப்பியது. கமலின் கருத்தை அதிமுக அமைச்சர்கள் கடுமையாக விமர்சித்தனர்.
ஆனால் ஸ்டாலின், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கமலுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனிடையே இந்தி திணிப்பிற்கு எதிராக எப்போது குரல் கொடுத்தேனோ அப்போதே தான் அரசியலுக்கு வந்துவிட்டதாக கமல் கூறியது மீண்டும் பரபரப்பை கூட்டியது. தைரியம் இருந்தால் நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வரட்டும். கமலஹாசனுக்கு ஆதரவளிக்கும் நிலைக்கு திமுக தள்ளப்பட்டுவிட்டது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருந்தார்.
இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,"திமுக என்பது மாபெரும் இயக்கம். இந்த இயக்கத்துக்கு தலைவர்கள் இருக்கிறார்கள், செயல் தலைவர் இருக்கிறார்.
எங்களுக்கு வேறு யாருடைய உதவியும் தேவையில்லை. நடிகர் கமல்ஹாசன் மற்றவர்கள் இயக்கி இயங்கக் கூடியவர் இல்லை. கமலை இயக்க வேண்டிய அவசியம் திமுகவிற்கு இல்லை. கமல் போன்ற பிறரின் உதவி திமுகவிற்கு தேவையில்லை. இத்தனை ஆண்டுகாலமாக தி.மு.க. யாருடைய உதவியும் இல்லாமல் தான் செயல்பட்டு வருகிறது. கமல்ஹாசனுக்கு தி.மு.க. உதவி செய்ய வேண்டிய அவசியமும் இல்லை.
கமல்ஹாசன் அவருடைய கருத்துக்களை சொல்லி வருகிறார். அது பற்றி நான் ஒன்றும் சொல்வதிற்கில்லை. திமுக தொடர்ந்து நீட் தேர்வு விலக்குக்காக அழுத்தம் கொடுத்தது. ஆனால் இப்போது தான் அதிமுக அமைச்சர்கள் நீட் தேர்வு விலக்குக்காக பிரதமரை சந்தித்துள்ளனர். இது காலம் தாழ்ந்த நிகழ்வு. பிரதமர் சந்திப்பின் போது நீட் தேர்வுக்கு முழு விலக்கு கேட்டார்களா அல்லது என்ன கோரிக்கையை வைத்தார்கள் என்பதில் தெளிவு இல்லை என்று தெரிவித்தார்.