ஊட்டி பக்கம் 3 மாதம் ஷூட்டிங் கிடையாது.. சுற்றுலா பயணிகள் ஜாலியா சுத்திப் பார்க்கலாம்!
சுற்றுலாப் பயணிகளுக்கு இடையூறு ஏற்படும் என்பதால் சீசன் காலமான ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாதங்கள் ஊட்டியில் சினிமா படப்பிடிப்புகள் நடத்த மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
ஊட்டி: அழகின் அரசியாக விளங்கும் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா 55 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இங்கு சுமார் 2 ஆயிரம் வகையான அரியவகை தாவரங்கள் மற்றும் கோடை சீசனையொட்டி 3 லட்சம் மலர்ச்செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன.
ஆண்டுதோறும் மே மாதத்தில் மலர்கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். பழமை வாய்ந்த இந்த பூங்காவில் ஏராளமான தமிழ், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்பட படப்பிடிப்புகள் நடந்துவருகின்றன.
இந்நிலையில் தற்போது கோடை காலம் என்பதால் மே மாதம் வரை சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுவது வழக்கம். இந்த பகுதியில் சினிமா படப்பிடிப்புகள் நடந்தால் அந்த பகுதியில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடுவார்கள்.
இதனால் இடையூறு ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு இந்த சீசன் காலங்களான ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாதங்கள் இங்கு சினிமா படப்பிடிப்புகள் நடத்த மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.