ஃபோனில் டெரர்.. நேரில் "அசால்ட் ஆறுமுகம்"... போலீஸுக்கு மிரட்டல் விடுத்தவர் இவரா? நம்ப முடியலையே
Recommended Video
சென்னை: போனில் டெரராக மிரட்டிய புல்லட் நாகராஜனின் குரலுக்கும் உடல் அமைப்புக்கும் துளிக் கூட சம்பந்தம் இல்லாதவராக இருக்கிறார்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே ஜெயமங்கலத்தை சேர்ந்தவர் புல்லட் நாகராஜன். பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், வழிபறி என ஏராளமான வழக்குகள் உள்ளன. இவர் மீது 1996-ஆம் ஆண்டு முதல் 71 வழக்குகள் இருந்தன. அவை அனைத்துக்கும் இவருக்கு சிறை தண்டனை கொடுக்கப்பட்டு விட்டது.
இவர் கடந்த சில நாட்களாக போலீஸ் பெண் அதிகாரிகளையும் ஆட்சியர், தேனி மாவட்ட எஸ்பியையும் மிரட்டல் விடுத்துள்ளார்.
போலீஸ் அதிகாரிகளையே புல்லட் நாகராஜன் மிரட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
லாரி ஏறும்
புல்லட் நாகராஜன் பெண் அதிகாரிகளை மிரட்டும் போது அவரது பேச்சில் எத்தனை வன்மம் தெரிந்தது என்பதை அந்த வீடியோக்களை கேட்டவர்கள் உணர்ந்திருப்பர். மதுரை சிறை துறை எஸ்பியிடம், "நான் பேசாமல் இருந்தாலும் என் பசங்க (அடியாட்கள்) பேசாம இருக்க மாட்டார்கள். உங்கள் மீது லாரி ஏறும் என்று மிரட்டியுள்ளார். அத்துடன் சில போலீஸ் அதிகாரிகளை குறிப்பிட்டு அவர் எப்படி கொல்லப்பட்டார் என்பது மறந்துவிட்டதா என்றும் கேட்டுள்ளார்.
ஈ மொய்ச்சி கிடக்காதீங்க
தென்கரை இன்ஸ்பெக்டர் மதனகலாவுக்கு மிரட்டல் விடுத்தபோது " அநியாயமா ஈ மொய்ச்சி அனாதை பிணமா கிடக்காதீங்க. நான் வேட்டையாடும் மிருகமாக மாறிடுவேன் " என்று மிரட்டியுள்ளார். அவரது புகைப்படமும் பார்ப்பதற்கு ஓரளவுக்கு பெரிய வில்லன் போல் இருந்தது.
திருச்சி சிறை
இந்நிலையில் நேற்று தென்கரை பகுதியில் பைக்கில் வலம் வந்த புல்லட் நாகராஜனை பெரியகுளம் போலீஸ் டிஎஸ்பி ஆறுமுகம் விரட்டி சென்று கைது செய்துள்ளார். இதையடுத்து அவர் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவரா மிரட்டல் விடுத்தார்
அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீஸார் அழைத்து வந்தனர். அப்போது அவரை பார்த்தவர்களுக்கு ஆச்சரியம். பில்லா ரேஞ்சுக்கு மிரட்டல் விடுத்த நாகராஜன் இவர்தானா என்று விழிபிதுங்கி பார்த்தனர். ஏனெனில் அவரது கம்பீர குரலுக்கும் அவரது உடல் அமைப்புக்கும் துளி கூட சம்பந்தமில்லை. போனில் டெரராக மிரட்டிய புல்லட் கடைசியில் அசால்ட் ஆறுமுகம் ரேஞ்சுக்கு இருந்தது அதிர்ச்சி அடைய வைத்தது.