குடும்ப ஆட்சிக்கு இடமில்லை.. வண்டலூர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் ஓ.பி.எஸ் பேச்சு
சென்னை: இந்த எஃகு கோட்டையில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை என்று காஞ்சிபுரம் மாவட்டம், வண்டலூரில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், எம்ஜிஆர் அஞ்சல் தலையை முதல்வர் பழனிசாமி வெளியிட துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பெற்றுக்கொண்டார்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் பங்கேற்ற இந்த விழாவில், தொண்டர்கள் மத்தியில் பன்னீர்செல்வம் பேசியதாவது:
தமிழகத்தில் இப்போது நடந்து கொண்டிருப்பது ஜெயலலிதாவின் நல்லாட்சி. எம்ஜிஆர், ஜெயலலிதா, லட்சியங்களை நிறைவேற்றும் ஆட்சி இது. எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் எதிர்கொள்ளும் கேடயமாக, தாக்கும் ஆயுதமாக வழிகாட்டுவது எம்ஜிஆர், ஜெயலலிதாதான்.
எம்ஜிஆர், ஜெயலலிதா, ஆசி இருக்கும்வரை இந்த பொற்கால ஆட்சி தொடரும். இந்த எஃகு கோட்டையில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை, ஊழல் ஆட்சிக்கு இடமில்லை. எங்களை நம்பியவர்கள் கெட்டுப்போகமாட்டார்கள், கெட்டுப்போக விடமாட்டோம். இவ்வாறு ஓபிஎஸ் தெரிவித்தார். மேலும், பாரதிக்கு பிறகு பாடல் மூலமே சமூகத்தை திருத்தியவர் எம்ஜிஆர் என்றெல்லாம், எம்ஜிஆர் குறித்த புகழ்களை பேசியமர்ந்தார் பன்னீர்செல்வம்.