தமிழகத்தில் திராவிட அரசியல் இனிமேலும் எடுபடாது.. தமிழிசை செளந்தரராஜன் 'நம்பிக்கை'
தமிழகத்தில் திராவிட அரசியல் இனிமேலும் எடுபடாது என்று தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்து உள்ளார்.
மதுரை : தமிழகத்தில் இனிமேலும் திராவிட அரசியல் எடுபடாது. மக்கள் அதனை புறம் தள்ளிவிட்டார்கள் என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்து உள்ளார்.
பாஜக மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன் மதுரையில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். பின்னர், பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது அவரிடம் பேருந்து கட்டண உயர்வு, ரஜினி கமல் அரசியல் வருகை உள்ளிட்ட பத்திரிகையாளர்களின் கேள்விக்கு அவர் பதிலளித்தார். மேலும், தமிழக அரசின் பேருந்து கட்டண உயர்வு தமிழக மக்களை பாதித்து இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
பொதுமக்கள் அவதி
இதுகுறித்து அவர் பதிலளிக்கையில், உலக அளவில் தொழில் முதலீடுகளை பெறுவதில் இந்தியா 5வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. இது பாஜக அரசின் மிகப்பெரிய சாதனையாகும். தமிழகத்தில் பஸ் கட்டணம் வரலாறு காணாத அளவிற்கு உயர்த்தப்பட்டு உள்ளது. மதுரையில் 1,225 அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. பஸ் கட்டண உயர்வால் மதுரையில் மட்டும் அரசுக்கு தினமும் கூடுதலாக ரூ. 50 லட்சம் வரை வசூலாகிறது. அப்படி என்றால் தமிழகம் முழுவதும் எவ்வளவு வசூலாகும் என்பதை நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள்.
அதிமுகவை பாஜக இயக்குகிறதா ?
பஸ் கட்டணம் உயர்வு மக்களின் முதுகில் சுமையாக தமிழக அரசு ஏற்றி உள்ளது. தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க. அரசு கடந்த 7 ஆண்டுகளாக பஸ் கட்டணத்தை உயர்த்த வில்லை என்றுகூறியுள்ளது. அப்படி என்றால் 7 ஆண்டுகளாக மற்ற துறைகளில் வரிகளை உயர்த்த திட்ட மிட்டுள்ளதை அரசு சூசகமாக தெரிவிக்கிறதா? அ.தி.மு.க. அரசை பின்புலமாக பாஜக இயக்குவதாக பலர் கூறுகிறார்கள் அதில் உண்மையும் இல்லை. அவர்களை இயக்க பாஜகவுக்கு அவசியமும் இல்லை.
ரஜினி கமல் அரசியல் வருகை
கமல் கஜானாவை நோக்கி எங்கள் பயணம் இல்லை என்று கூறியுள்ளார். ரஜினி இன்னும் எதுவும் அறிவிக்கவில்லை. மு.க. ஸ்டாலினோ புதிய பறவைகள் பறக்க துடிக்கின்றன என ரஜினி, கமலை குறிப்பிட்டுள்ளார். மேலும் புதிய பறவைகள் பறக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார். பழைய பறவைகளாகிய நீங்கள் இன்னும் பறக்க முடியவில்லையே. மக்களுக்கு பல பறவைகள் மூலம் எந்த பயனும் இல்லை. தமிழகத்தில் திராவிட அரசியல் இனிமேல் எடுபடாது. மக்களை காக்கும் திறமையும், தகுதியும் பாஜகவுக்கு மட்டுமே உண்டு.
பாஜக மேல் வீண்பழி
மதுரையில் வருகிற 31ம் தேதி தெப்பத்திருவிழா நடக்கிறது. ஆனால் தற்போது வரை தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மத்திய அரசு பெட்ரோலிய பொருட்களை ஜி.எஸ்.டி.க் குள் கொண்டு வருவது தொடர்பாக பரிசீலித்து வருகிறது. எல்லாவற்றையும் சரியான நேரத்தில் பாஜக அரசு செய்து வருகிறது. ஆனால், சிலர் பாஜக மேல் வீண் பழி சுமத்துவது போல நடந்துகொள்கிறார்கள் இது கண்டிக்கத்தக்கது என்று தமிழிசை செளந்தரராஜன் குறிப்பிட்டு உள்ளார்.