எச்.ராஜா டுவிட்டுக்கு ப. சிதம்பரம் எதிர்ப்பு.. குண்டர் சட்டத்தில் கைது செய்க.. முத்தரசன் கொதிப்பு
Recommended Video
சென்னை: பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா வெளியிட்ட மோசமான டுவிட்டர் கருத்துக்கு, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
"தன் கள்ள உறவில் பெற்றெடுத்த கள்ளக் குழந்தையை (illegitimate child) மாநிலங்களவை உறுப்பினராக்கிய தலைவரிடம் ஆளுநரிடம் கேட்டது போல் நிருபர்கள் கேள்வி கேட்பார்களா. மாட்டார்கள். சிதம்பரம் உதயகுமார், அண்ணாநகர் ரமேஷ், பெரம்பலூர் சாதிக் பாட்ஷா நினைவு வந்து பயமுறுத்துமே" என்று எச்.ராஜா இன்று காலை டுவிட்டரில் கருத்து கூறியுள்ளார்.
இந்த டுவிட்டுக்கு பல தரப்பில் இருந்தும் கண்டனங்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இதுகுறித்து ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள ஒரு டுவிட்டில், சட்டத்திற்கு புறம்பான குழந்தை என்ற ஒன்று கிடையவே கிடையாது. அனைத்து குழந்தைகளும் சட்டத்திற்கு உட்பட்டவர்கள். பாஜக எங்கே நிற்கிறது என்பது பற்றி விளக்க வேண்டும். இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இதேபோல கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறுகையில், எச்.ராஜா சுய விளம்பரத்திற்காக இப்படி பேசி வருகிறார். வன்முறையை தூண்டும் வகையில் பேசி வரும் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவை தமிழக அரசு உடனடியாக குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும், என்றார்.