துணைவேந்தர் நியமனத்தில் விதிமுறைகள் மீறப்படவில்லை - அமைச்சர் ஜெயக்குமார்
துணைவேந்தர் நியமனத்தில் விதிமுறைகள் எதுவும் மீறப்படவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
Recommended Video
சென்னை: தமிழ்நாடு இசைப்பல்கலைக்கழகத்திற்கு கேரளத்தவரை துணை வேந்தராக நியமித்தது ஏன் என்று கேள்வி எழுப்பிய இயக்குநர் பாரதிராஜாவிற்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார். துணைவேந்தர் நியமனத்தில் விதிமீறல் எதுவும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் மட்டுமே எனது நடவடிக்கை என ஆளுநர் பன்வாரிலால் தெரிவித்ததாக இயக்குநர் பாரதிராஜா கூறியுள்ளார். இசை, சட்டப்பல்கலைக்கழகம், துணைவேந்தர் நியமனத்தில் தொடர்பில்லை என்று ஆளுநர் கூறியதாக பாரதிராஜா கூறினார்.
தமிழ்நாடு இசைப்பல்கலைக்கழகத்திற்கு கேரளத்தவரை துணை வேந்தராக நியமித்தது ஏன்? அதேபோல் அம்பேத்கர் சட்டப்பல்லைகழகத்தில் துணை வேந்தராக ஆந்திரத்தவர் நியமிக்கப்பட்டது ஏன் எனவும் பாரதிராஜா கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் தரும் விதமாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், துணைவேந்தர் நியமனத்தில் விதிமுறைகள் எதுவும் மீறப்படவில்லை என்று கூறினார். இத்தனை கேள்விகளைக் கேட்கும் பாரதிராஜா, தென்னிந்திய நடிகர் சங்கத்தில் பொறுப்பில் இருப்பது யார் என்று கேட்டார். அதே போல தயாரிப்பாளர் சங்க தலைவராக இருப்பவர் தமிழரா என்றும் கேட்டார். திரைப்பட துறையிலேயே வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர் பொறுப்பில் இருக்கிறார்களே என்றும் கூறினார் அமைச்சர் ஜெயக்குமார்.
தொடர்ந்து பேசிய அவர், காவிரி விவகாரத்தில் தமிழக உணர்வுகளை ஐபிஎல் நிர்வாகத்திடம் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதனையடுத்து போட்டியை நடத்துவதும், நடத்தாததும் ஐபிஎல் நிர்வாகத்திடம் உள்ளது. ஐபிஎல் போட்டிகளை நிர்வாகம் நடத்தினால் பாதுகாப்பு உள்ளிட்ட என்ன வழிமுறைகள் உள்ளதோ அதனை தமிழக அரசு சார்பில் செய்து கொடுக்கப்படும் அதுதான் நீதி என்றும் தெரிவித்தார்.