ஒன்னு மன்னார்குடி மாபியா.. இன்னொரு மணல் மாபியா.. என்ன ஆச்சரியம் இதுல.. தினகரனை வாரிய ஸ்டாலின்!
மன்னார்குடி மாஃபியா கும்பலை, தாது மணல் மாஃபியா கும்பல் வந்து சந்திப்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை என டிடிவி.தினகரன் - வைகுண்டராஜன் சந்திப்பு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தெரிவித்து
சென்னை: மன்னார்குடி மாஃபியா கும்பலை, தாது மணல் மாஃபியா கும்பல் வந்து சந்திப்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை என டிடிவி.தினகரன் - வைகுண்டராஜன் சந்திப்பு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் ஆர்கே.நகரில் வேட்பு மனுத்தாக்கலுக்குப் பிறகு பிரச்சாரத்தை தொடங்குவோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
சென்னை அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்களின் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. அப்போது ஆர்கே.நகர் இடைத்தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து திமுக செயல்தலைவரான ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது டிடிவி.தினகரன் - வைகுண்டராஜன் சந்திப்பு குறித்து செய்தியாளர்கள் ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஸ்டாலின் மாஃபியா கும்பலை தாது மணல் மாஃபியா சந்தித்ததில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்றார்.
ஆர்கே.நகர் தொகுதியில் எப்போது பிரச்சாரத்தை தொடங்குவீர்கள் என்று கேட்டனர். அதற்கு பதிலளித்த ஸ்டாலின் வேட்பு மனுத்தாக்கலுக்குப்பின் பிரச்சாரத்தை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் ஏரிகள் உள்ளிட்ட நீர் ஆதராங்கள் குறைந்துவிட்டது என்ற கேள்விக்கு பதில் கூறிய ஸ்டாலின் இந்த ஆட்சி அதுபற்றி எல்லாம் கவலைப்படவில்லை என குற்றம்சாட்டினார். அவர்களுடைய கவலையெல்லாம் குற்றவாளியாக இருக்கக்கூடிய சசிகலாவின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த பினாமி ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதில் மட்டும் தான் உள்ளது என்றும் அவர் கூறினார்.
மக்களை பற்றி அவர்களுக்கு எந்த கவலையும் இல்லை என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும் ஆர்கே.நகரில் பணப்பட்டுவாடா செய்யப்படுவதுக் குறித்து தேர்தல் ஆணையத்திடம் ஏற்கனவே பல புகார்கள் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் ஸ்டாலின் கூறினார்.