வானில் தெரிந்த சூப்பர் மூன்.. சென்னை முதல் குமரி வரை மக்கள் உற்சாகம்
சூப்பர் மூனை வானில் பார்த்த மக்கள் போட்டோக்கள் எடுத்து மகிழ்ந்தனர்.
சென்னை: வானத்தில் ஏற்படும் அபூர்வ நிகழ்வான 'சூப்பர் நிலவு' நேற்று சென்னை முதல் கன்னியாகுமரி வரை தமிழகத்தின் பெரும் பகுதிகளில் நன்றாக தெரிந்தது.
பூமிக்கும், நிலவுக்கும் இடையேயான சராசரி தொலைவு 3,84,500 கி.மீ. ஆகும். ஆனால், இத்தொலைவு 3,63,396 கி.மீ. முதல் 4,05,504 கி.மீ. வரை வேறுபடும். பூமியை நிலவு நெருங்கி வரும்போது வழக்கத்தைவிட பிரகாசமாகக் காணப்படும். அதுவே "சூப்பர் மூன்' என அழைக்கப்படுகிறது.
இதுபோன்ற அரிய நிகழ்வு நேற்று வானில் நிகழ்ந்தது. வழக்கமாக பௌர்ணமி தினத்தில் காட்சியளிக்கும் நிலவைவிட 14 சதவீதம் பெரியதாகவும், 30 சதவீதம் அதிக பிரகாசத்துடனும் காணப்படும் எனவும் தெரிவித்திருந்தது.
கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் பகுதியில் திங்கள்கிழமை மாலை 6 மணிக்கே ஏராளமான சுற்றுலாப் பயணிகள் திரண்டனர். மாலை 6.30 மணி முதல் வழக்கத்தைவிடப் பிரகாசமான நிலவு தெரியத் தொடங்கியது. இதனை சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் பார்வையிட்டதுடன் புகைப்படங்களும் எடுத்து மகிழ்ந்தனர்.
சென்னை பிர்லா கோளரங்கத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்காக சிறப்பு ஏற்பாடாக திறந்தவெளியில் தொலைநோக்கிகள் அமைக்கப்பட்டு இருந்தன.
இதன் மூலம் பார்வையாளர்கள் நிலாவை பார்வையிட்டனர். நிலவில் எரிமலை குழம்புகள் வழிந்தோடிய சமவெளி பகுதிகள் திட்டு திட்டுகளாக இருப்பதை கூட துல்லியமாக காண முடிந்தது என்று மாணவர்கள் தெரிவித்தனர். பலரும் போட்டோக்கள் எடுத்து அபூர்வ தருணத்தை பத்திரப்படுத்திக்கொண்டனர். மேலும் சிலரோ பெரிய வித்தியாசமே தெரியவில்லையே எனவும் கூறினர்.