கீழடியில் 60 குடியிருப்புகள் இருந்ததற்கான தடயங்கள்... தொல்லியல் துறை அதிகாரி தகவல்
கீழடியில் 60 குடியிருப்புகள் இருந்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளதாக தொல்லியல் துறை கண்காணிப்பாளர் ஸ்ரீராம் தெரிவித்தார்.
கீழடி: கீழடியில் 60 குடியிருப்புகள் இருந்ததற்கான தடயங்கள் தற்போது நடைபெற்று வரும் 3-ஆம் கட்ட அகழாய்வில் தெரியவந்துள்ளதாக தொல்லியல் துறை கண்காணிப்பாளர் ஸ்ரீராம் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம், திருபுவனம் வட்டம், கீழடி அருகே அமைந்துள்ள பள்ளிச் சந்தை திடலில் இந்தியத் தொல்லியல் துறையினரால் கடந்த 2 ஆண்டுகளாக (2014-15, 2015-16) அகழ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் வரலாற்றின் தொடக்க காலத்தைச் சேர்ந்த செங்கல் கட்டுமானங்கள் மற்றும் பலவகையான தொல்பொருள்கள் வெளிக் கொணரப்பட்டன.
கீழடியில் தற்போது 3-ஆம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் வரும் 30-ஆம் தேதிக்குள் முடிவடையும்.
மழையால் பாதிப்பு
எனினும் மழையால் அகழ்வாராய்வு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. அகழாய்வு பணி குறித்து தொல்லியல் கண்காணிப்பாளர் ஸ்ரீராம் தெரிவிக்கையில், சிவகங்கை மாவட்டம் கீழடியில் 60 ஏக்கர் பரப்பில் குடியிருப்புகள் இருந்ததற்கு அடையாளங்கள் கிடைத்துள்ளன.
ஆய்வு செய்துள்ளோம்
இதுவரை 400 சதுரமீட்டர் பரப்பளவில் ஆய்வு செய்துள்ளோம். 3-ம் கட்ட ஆய்வு பணிகள் செப்டம்பர் 30-ம் தேதியுடன் முடிவடையுள்ளது. கீழடியில் ஆராய்ச்சியை தொடர அனுமதி கோரியுள்ளோம்.
பழங்கால பொருள்கள்
கடந்த 6 மாதங்களில் 1800 பழங்கால பொருட்கள் ஆய்வு மூலம் கிடைத்துள்ளன. மேலும் அகழ்வாராட்சியில் 2200 ஆண்டுகள் பழமையான பொருட்கள் கிடைத்துள்ளன.
90 சதவீதம் கண்ணாடியால் ஆனது
அவற்றில் 1500-க்கும் மேற்பட்டவையாக மணிகளே உள்ளன. மொத்த மணிகளில் 90 விழுக்காடு கண்ணாடியில் செய்யப்பட்டவை. மீதமுள்ள மணிகள் பளிங்கு, சூதுபவளம், பச்சைக்கல் மற்றும் சுடுமண்ணில் செய்யப்பட்டவையாகும். இதுதவிர தந்தத்தில் செய்த சீப்பின் உடைந்த பகுதி, விளைய்ட்டுக் காய்கள், காதணிகள், செப்பு, எலும்பு முனைகள், இரும்பு உளிகள் போன்ற பொருள்கள் கிடைத்துள்ளன.
14 பிராமி எழுத்துக்கள்
இன்று வரை 14 தமிழ் பிராமி எழுத்துக்களுடன் கூடிய பானையோடுகள் கிடைத்துள்ளன. அவற்றுள் ஒளிய (ன்) என்ற முழுப்பெயரும் மற்றவை தனிநபர்களின் பெயர்களில் ஓரிரு எழுத்துக்களே காணப்படுகின்றன. மேலும் சதுர மற்றும் வட்ட வடிவிலான தேய்ந்த செப்புக் காசுகள், 5 தங்கப் பொருள்கள், ஒரு சில மண்ணுருவங்களும் அகழாய்வில் இதுவரை கிடைத்துள்ளன. அகழாய்வு குறித்து 2 மாதத்தில் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று ஸ்ரீராம் தெரிவித்தார்.