சிறையில் உயிருக்கு ஆபத்து... அச்சத்தில் கதறும் நிர்மலா தேவி... வக்கீல் 'பகீர்'
மதுரை மத்திய சிறையில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக நிர்மலா தேவி அச்சம் அடைந்துள்ளதாக வழக்கறிஞர் தெரிவித்தார்.
Recommended Video
மதுரை: மதுரை மத்திய சிறையில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக நிர்மலா தேவி கூறியதாக அவரது வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.
பேராசிரியை நிர்மலா தேவி, விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் உயரதிகாரிகளுன் ஆசைக்கு இணங்க கல்லூரி மாணவிகள் 4 பேரிடம் வற்புறுத்தினார்.
இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக நிர்மலா தேவி மாணவிகளுடன் பேசிய ஆடியோ ஆதாரம் வெளியானது. இதையடுத்து புகாரின் பேரில் அருப்புக்கோட்டை போலீஸார் நிர்மலா தேவியை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
நீதிபதி உத்தரவு
பின்னர் விருதுநகர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதியின் வீட்டில் நிர்மலா நேற்றைய தினம் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து அவரை ஏப்ரல் 28-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
தொழில் போட்டி
இதையடுத்து நிர்மலா தேவி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை அவரது வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன் சந்தித்து சிறையில் பேசினார். இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் இந்த பிரச்சினைக்கு காரணம் அருப்புக்கோட்டை கல்வி நிலையங்களில் இருக்கும் தொழில் போட்டிதான் ஆகும்.
பெரிதாக்குகின்றன
அருப்புக்கோட்டையை பொறுத்தவரை நிர்மலா தேவி பணியாற்றிய கல்லூரி நம்பர் 1 கல்லூரி. இந்த கல்லூரியின் மாணவர் சேர்க்கை பாதிக்க வேண்டும் என்பதற்காக மற்ற போட்டி கல்லூரி நிறுவனங்கள் இந்த விஷயத்தை ஊதி பெரிதாக்குவதாக நிர்மலா தேவி கூறினார்.
சிறைத் துறை மூலம் பாதுகாப்பு
சிறையில் சிறப்பு சலுகைகள் ஏதும் அவர் கேட்கவில்லை. சிறையில் அசாதாரணமான சந்தர்ப்ப சூழல்கள் இருக்கின்றன. இது எனது உயிருக்கு ஆபத்து என்பது போல் தோன்றுகிறது. இதை மீடியாவில் கூறி எனக்கு சிறைத்துறை மூலம் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று நிர்மலா தேவி என்னிடம் கூறினார்.
ஒட்டப்பட்டுள்ளது
உயிருக்கு ஆபத்து உள்ளது பற்றி நீதிமன்றத்தில் முறையிடப்படும். ஆடியோ நான் பேசியதுதான் ஆனால் அதில் சில விஷயங்கள் ஒட்டப்பட்டுள்ளது. ஆடியோ திரித்து பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். சிறை அதிகாரிகள், வார்டன் உள்ளிட்டோர் இருந்ததால் என்னால் சரியாக பேசமுடியவில்லை. அவரை ஜாமீனில் எடுத்து பின்னர் அவரது செல்போனில் உள்ளது குறித்த ஆதாரங்கள் திரட்டப்படும் என்றார் அவர்.