சென்னையில் வரும் வாரம் முழுவதும் வெயில்... அடுத்த வாரத்தில்தான் லேசான மழையாம்... நார்வே வானிலை தகவல்
சென்னையில் வரும் வாரம் முழுவதும் வெயில் இருக்கும் என்றும் அடுத்த வாரத்தில்தான் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக நார்வே வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை: சென்னையில் வரும் வாரம் முழுவதும் மழைக்கு வாய்ப்பில்லை என்று நார்வே வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 30-ஆம் தேதி தொடங்கியது. தொடக்க நாளிலேயே மழை வெளுத்து வாங்கியது. இதனால் சென்னையில் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தேங்கியது.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக வெயிலும் மழையும் மாறி மாறி இருந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறியது. அதற்கு ஓகி என பெயரிடப்பட்டது. ஓகி புயல் தென் தமிழகத்தை உலுக்கியது.
இந்த புயல் கரையை கடந்த பிறகும் கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகள் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. இந்நிலையில் தெற்கு அந்தமானில் உருவான வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு அந்தமானில் நிலவி வருவதாகவும், அடுத்த 24 மணி நேரத்தில் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே நார்வே வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இன்று முதல் வரும் வெள்ளிக்கிழமை வரை மழை கிடையாது என்றும் அடுத்த சனிக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.