விடாது கருப்பாய்... போக்குவரத்து போலீஸாருக்கும் தெர்மாகோல் தொப்பிகள்...வியர்வை ஆவி ஆகாமல் தடுக்கும்?
கோடை வெயிலை சமாளிக்க போக்குவரத்து போலீஸார் தெர்மாகோல் மூலம் வடிவமைக்கப்பட்ட சோலார் தொப்பியை அணிந்து கொள்ளுமாறு போக்குவரத்து காவல் துறை உயரதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
சென்னை: கோடை வெயிலை சமாளிக்க போக்குவரத்து போலீஸார் தெர்மாகோல் மூலம் வடிவமைக்கப்பட்ட சோலார் தொப்பியை அணிந்து கொள்ளுமாறு போக்குவரத்து காவல் துறை உயரதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை பெய்யாமல் போனதால் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் கோடைக் காலம் ஏற்படுவதற்கு முன்னர் பெரும்பாலான நீர் நிலைகள் வறண்டன. இதனால் மக்கள் தண்ணீருக்காக ஆளாய் பறந்து வருகின்றனர். கிட்டத்தட்ட 25 கி.மீ. தூரம் சென்றால் மட்டுமே குடிநீர் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
கத்திரி வெயில்
கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருவதால் மக்கள் கடுமையாக பாதிகப்படைந்து வருகின்றனர். அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயிலானது கடந்த 4-ஆம் தேதி தொடங்கியது. இதன் எதிரொலியாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களி வெப்பம் சதம் அடித்து வருகிறது.
ஆங்காங்கே மழை
திருநெல்வேலி, நாகர்கோயில், ஆரல்வாய்மொழி,வால்பாறை, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளிலும், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. வறட்சியால் ஏற்பட்ட பயிர் சேதத்தை சமாளிக்க முடியாமல் திண்டாடி வரும் நிலையில் மழையால் வாழை உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளன.
போக்குவரத்து போலீஸார்
இந்நிலையில் கடும் வெயிலில் நின்று சோர்வடையும் போக்குவரத்து போலீஸாரின் உடல் நிலையை கருத்தில் கொண்டு அவர்களுக்கு தர்ப்பூசணி, மோர் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. மேலும் வெயில் காலம் முடியும் வரை போக்குவரத்து போலீசார் அனைவரும் தெர்மோகோல் மூலம் வடிவமைக்கப்பட்ட சோலார் தொப்பியை அணிந்து கொண்டு பணியாற்றுமாறு போக்குவரத்து கூடுதல் கமிஷனர் அபய்குமார்சிங் அறிவுரை வழங்கி உள்ளார்.
ஆவி ஆவதை தடுக்க...
கடந்த சில நாள்களுக்கு முன்பு வைகை அணையில் நீர் ஆவியாதலை தடுக்க அமைச்சர் செல்லூர் ராஜு உள்ளிட்டோர் தெர்மாகோல் போட்டு மூட முயற்சித்தனர். ஆனால் பெரும் காற்று காரணமாக வைத்த 10 விநாடிகளுக்குள் அந்த தெர்மாகோல்கள் கரை ஒதுங்கியதால் இந்த முயற்சி கேலிக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.