ஊரே சிரித்த தெர்மாகோல் திட்டம்.. அதிகாரி மீது பழியை போட்டு ஆக்ஷன் எடுத்த அரசு
வைகை அணையில் நீர் ஆவியாவதை தடுக்க தெர்மோகோல் பரப்பிய விவகாரம் கேலிக் கூத்தானதால் திட்ட செயற்பொறியாளர் பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.
சென்னை: வைகை அணையில் நீர் ஆவியாவதை தடுக்க தெர்மாகோல் பரப்பிய விவகாரம் கேலிக் கூத்தானதால் திட்ட செயற்பொறியாளர் பணியிடமாற்றம் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ளது வைகை அணை. இந்த அணையின் தண்ணீர் மதுரை, தேனி மாவட்டங்களின் கூட்டுக்குடிநீர் திட்டங்களுக்கு பயன்படுகிறது. பருவமழை பொய்த்துப் போனதால் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. தற்போது அணை நீர்மட்டம் 23.10 அடி மட்டுமே உள்ளது. இதே தேதியில் கடந்த ஆண்டு இந்த அணையின் நீர் மட்டம் 35 அடியாக இருந்தது. எனவே தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு நேற்று காலை அந்த அணைக்கு அதிகாரிகளுடன் சென்றார் அமைச்சர் செல்லூர் ராஜு.
அப்போது 200 மீட்டருக்குள்பட்ட நீர் பகுதியில் நீர் ஆவியாதலை தடுக்க தெர்மாகோல் அட்டைகளை மிதக்கவிட்டனர். இந்நிலையில் அடுத்த 10 வினாடிக்குள் மிதக்கப்பட்ட தெர்மாகோல் அட்டைகள் காற்றின் வேகம் காரணமாக அடித்து வரப்பட்டு கரை ஒதுங்கின.
இதனால் இந்த திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர் செல்லூர் ராஜுவை சமூக வலைதளங்களில் செமயாக கலாய்த்துள்ளனர். இதனால் அரசின் திட்டம் கேலிக்குரியதாகிவிட்டது.
கடும் விமர்சனத்துக்குள்ளான இந்த சம்பவத்தை தொடர்ந்து பெரியாறு பாசனக் கால்வாய் செயற்பொறியாளர் பொறுப்பிலிருந்து முத்துக்கருப்பன் தமிழக அரசின் சிறப்பு திட்ட செயற்பொறியாளர் பதவிக்கு இடமாற்றம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.