சரத், டாக்டர் கிருஷ்ணசாமி, அருண்பாண்டியன், 'மாஃபா' … முதல்ல இவங்கள்ளாம் வேட்டி கட்டுவார்களா?
சென்னை: சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் கிளப்பில் நடைபெற்ற ஒரு நூல் வெளியீட்டு விழாவிற்கு வேட்டி, சட்டையில் சென்ற நீதிபதி ஹரிபரந்தாமன், மூத்த வழக்கறிஞர்கள் ஆர். காந்தி, சுவாமிநாதன் ஆகியோருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
கிரிக்கெட் சங்க நிர்வாகத்துக்கு அனைத்துக் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். வழக்கறிஞர்கள், தமிழறிஞர்களும் எதிர்ப்புக் குரல் கொடுத்து வருகின்றனர்.
சட்டப்பேரவையிலும் இந்தப் பிரச்சினை எதிரொலித்தது. கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் கிரிக்கெட் கிளப்பை கண்டித்து பேசினர்.
அனுமதி ரத்து
வேட்டி கட்டியவர்களை அனுமதிக்காமல் தமிழர் நாகரிகத்துக்கு எதிராக செயல்படும் மன்றங்களின் (கிளப்புகள்) அனுமதிகள் ரத்து செய்யப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கடுமையாக எச்சரித்துள்ளார்.
பாரம்பரிய உடை
தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி அணிந்து செல்ல எதிர்ப்பு தெரிவித்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ள நிலையில், சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆடைப் பழக்கம் சமீபகாலமாக மாறி வருகிறது. சில அரசியல்வாதிகள் வேட்டி அணியாமல் பேன்ட் அணிந்து சட்டப் பேரவைக்கு வருகை தருகின்றனர்.
அரசியல்வாதிகளின் அடையாளம்
கட்சி, கொள்கைகளுக்கு அப்பாற் பட்டு அரசியல்வாதிகளை இணைக்கும் ஒரே விஷயம் வேட்டி, சட்டைதான். தமிழக சட்டப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் காலம்காலமாக வேட்டி அணிந்து வருவதையே வழக்கமாக கொண்டுள்ளனர்.
இளம் உறுப்பினர்களிடம் மாற்றம்
ஆனால், தற்போது இளம் உறுப்பினர்களின் வருகை அதிகரித்திருப்பதால் வேட்டிக்கு பதில் பேன்ட், சட்டையை அதிகம் காண முடிகிறது.
பரிதி இளம் வழுதி, வேல்முருகன்
கடந்த திமுக ஆட்சி காலத்தில் சட்டப்பேரவையில் அப்போதைய திமுக உறுப்பினரான பரிதி இளம்வழுதி, இந்திய கம்யூனிஸ்ட் தளி ராமச்சந்திரன், பாமக வேல்முருகன், மார்க்சிஸ்ட் கட்சியின் டில்லிபாபு, மகேந்திரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ரவிகுமார் போன்ற சிலர் பேன்ட் அணிந்து வந்தனர்.
அதிமுக உறுப்பினர்கள்
இப்போது அதிமுக ஆட்சி காலத்தில் சில நேரங்களில் அதிமுக எம்.எல்.ஏ வி.பி.கலைராஜன் பேன்ட் அணிந்து வருவார். மற்ற அதிமுக உறுப்பினர்கள் எல்லோரும் வேட்டி, சட்டை அணிந்துதான் பேரவைக்கு வருகின்றனர்.
தேமுதிக எம்.எல்.ஏக்கள்
தேமுதிக கட்சியில் இருந்து அதிக அளவில் இளம் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இப்போது பேரவைக்கு பேன்ட் அணிந்து வருகின்றனர்.
நடிகர் அருண்பாண்டியன்
அக்கட்சியின் கொறடா சந்திர குமார், பாபுவேல்முருகன், சேகர் போன்றோரும் அதிருப்தி உறுப்பினர்களில் அருண்பாண்டியன், மைக்கேல் ராயப்பன், மாஃபா பாண்டியராஜன், சுந்தர்ராஜன் ஆகியோரும் பெரும்பாலும் பேன்ட், சட்டையில்தான் பேரவைக்கு வருகின்றனர்.
டாக்டர் கிருஷ்ணசாமி
புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி எப்போதுமே பேன்ட், கலர் சட்டையுடனே காணப்படுவார்.
சமக சரத்குமார்
சமக தலைவர் சரத்குமார் பெரும்பாலும் வேட்டி சட்டையில் வந்தாலும் அவ்வப்போது பேன்ட், சட்டையில் பேரவைக்கு வருகிறார்.
இடது சாரி எம்.எல்.ஏக்கள்
இந்தப் பட்டியலில் இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்த டில்லிபாபு, பீம்ராவ், தளி ராமச்சந்திரனும் அடங்குவர்.
பெண் உறுப்பினர்கள்
பெண் உறுப்பினர்களில் ஆங்கிலோ இந்திய நியமன உறுப்பினரான நான்சி ஆன் சிந்தியா பிரான்சிஸ் மட்டுமே சுடிதார் அணிந்து வருகிறார். பேரவைக்குள் ஆடை கட்டுப்பாடு எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.