தேவரின் தங்கக் கவசத்துக்கு அதிமுகவின் இரு அணிகள் மோதல் - கலெக்டரிடம் ஒப்படைத்த வங்கி
முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு அணிவிக்க உள்ள தங்கக் கவசத்தை மதுரை மாவட்ட ஆட்சியரிடம் வங்கி நிர்வாகம் அளித்துள்ளது.
மதுரை: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு அணிவிக்க உள்ள தங்கக் கவசத்தை தங்களிடமே தரவேண்டும் என்று அதிமுகவின் இரு அணிகளும் முட்டி மோதியதால் மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவிடம் வங்கி நிர்வாகம் ஒப்படைத்தது.
பசும்பொன்னில் உள்ள தேவர் சிலைக்கு ஜெயந்தி விழாவின்போது அணிவிக்கும் வகையில் ஜெயலலிதாவால் கடந்த 2014ஆல் 13 கிலோ எடைகொண்ட தங்கக் கவசம் அ.தி.மு.க. சார்பில் வழங்கப்பட்டது. விழா முடிந்தபின்னர் அந்தக் கவசம் மதுரை அண்ணா நகரில் உள்ள பேங்க் ஆஃப் இந்தியா கிளையின் பெட்டகத்தில் பாதுகாப்பாக வைக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் தேவர் ஜயந்திவிழாவின்போது அதிமுகவின் பொருளாளரும், தேவர் நினைவாலயத்தின் நிர்வாகியும் வங்கிக் கிளைக்கு நேரில் சென்று அந்த தங்கக் கவசத்தைப் பெற்றுச் செல்வது வழக்கம்.
இந்த ஆண்டு வரும் 30ஆம் தேதி தேவர் ஜெயந்தி கொண்டாடப்பட உள்ளது. அவருடைய சிலைக்கு அணிவிக்கும் தங்கக் கவசம், கிரீடத்தை மதுரை வங்கியில் வந்து பெற்றுக் கொள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மதுரைக்கு வந்தார். அதே இடத்திற்கு தினகரன் ஆதரவாளர்களும் வந்துள்ளதால் சலசலப்பு ஏற்பட்டது.
வங்கி நிர்வாகம் மறுப்பு
சில தினங்களுக்கு முன்பு தங்கக் கவசத்தைப் பெறுவதற்காக வங்கிக்குச் சென்ற அதிமுக நிர்வாகிகளிடம் பொருளாளர் பதவி யாருக்கு என்பதில் சர்ச்சையாக இருப்பதால் தங்கக் கவசத்தை வழங்க வங்கி நிர்வாகம் மறுத்ததாகத் தெரிகிறது.
அதிமுக பொருளாளர்கள்
அதிமுக பொருளாளராக ஓபிஎஸ் பதவிவகித்தார். திண்டுக்கல் சீனிவாசனை பொருளாளராக நியமித்தார் சசிகலா. பின்னர் ரங்கசாமியை பொருளாளராக்கினார் தினகரன். இதில்தான் சிக்கலே உருவானது. பசும்பொன் அறக்கட்டளை அறங்காவலர் காந்தி மீனாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால், 27ஆம் தேதிக்குள் தங்கக் கவசத்தைப் பாதுகாப்புடன் பசும்பொன் கொண்டு சென்று அவரிடம் ஒப்படைக்க வங்கி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
ஓபிஎஸ் - இபிஎஸ் விளக்கம்
ஓ.பி.எஸ்.- இ.பி.எஸ் இணைந்த பிறகு, நடக்கும் முதல் தேவர் ஜெயந்தி என்பதால், சிறப்பாகக் கொண்டாட முடிவு செய்திருந்தனர். இந்த நிலையில் தங்க கவசத்தை அளிப்பது குறித்து வங்கி எழுப்பிய கேள்வி சலசலப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து ஓபிஎஸ், ஈபிஎஸ் சார்பில் விளக்கமான கடிதம் அளிக்கப்பட்டது.
கவசத்தை ஒப்படைக்க கடிதம்
இதேபோல டிடிவி தினகரன் தரப்பில் இருந்தும் வங்கிக்கு கடிதம் எழுதப்பட்டது. தேவர் சிலைக்கு அணிவிக்கப்பட வேண்டிய தங்கக் கவசத்தை கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலாவால் அங்கீகரிக்கப்பட்ட பொறுப்பாளரிடமே அளிக்க வேண்டும் என்று கூறி மதுரை யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் தலைமை மேலாளருக்கு டி.டி.வி. தினகரன் கடிதம் எழுதியுள்ளார்.
தினகரன் கடிதத்தால் சலசலப்பு
அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா செயல்படுவதற்கும், அவரால் நியமிக்கப்பட்ட கட்சி நிர்வாகிகள் செயல்படவும் எந்தவிதத் தடையும் இதுவரை விதிக்கப்படவில்லை எனவே, சசிகலாவின் அறிவுரைப்படி தேவர் சிலைக்கு அணிவிக்கப்பட வேண்டிய தங்கக் கவசத்தை பசும்பொன் தேவர் நினைவாலயத்தின் நிர்வாகியிடம் மட்டுமே ஒப்படைக்க வேண்டும் என்று தினகரன் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஓபிஎஸ், அமைச்சர்கள் வருகை
இதனிடையே தேவர் குருபூஜை அக்டோபர் 30ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் தேவர் சிலைக்கு அணிவிக்கும் கிரீடம் தங்கக் கவசத்தை பெறுவதற்காக துணை முதல்வரும், கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓபிஎஸ், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, உதயகுமார் ஆகியோர் மதுரை அண்ணாநகரில் அமைந்துள்ள வங்கிக்கு வந்தனர்.
கவசத்தை ஒப்படைக்க முடிவு
வங்கிக்கு வந்த ஓபிஎஸ், அமைச்சர்கள் கையெழுத்து போட்டனர். இதையடுத்து பெட்டகத்தில் இருந்த தேவரின் தங்கக்கவசம், கிரீடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது. அமைச்சர்கள், துணைமுதல்வரின் வருகையை முன்னிட்டு வங்கி முன்பாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
மதுரை, ராமநாதபுரம் ஆட்சியர்கள்
தங்க கவசத்தை தங்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்று இரு அணிகளும் முட்டி மோதியதால் பல மணிநேரம் சர்ச்சை நீடிக்கவே, மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் வங்கிக் கிளைக்கு வருகை தந்தார். அவரிடம் கவசத்தை ஒப்படைக்க அனுமதி கோரி எழுத்து பூர்வமாக இரு அணிகளும் எழுதித்தரவேண்டும் என்று வங்கி அதிகாரிகள் கேட்டனர்.
தேவருக்கு தங்கக் கவசம்
தங்க கவசத்தை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவிடம் வங்கி நிர்வாகம் ஒப்படைத்தது. கவசத்தை பெற்றுக்கொண்டு பாதுகாப்புடன் செல்லும் மதுரை மாவட்ட ஆட்சியர், பார்த்திபனூர் அருகே ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் அதனை அளிக்கிறார். அக்டோபர் 28 முதல் 31வரை தங்கக் கவசம் அணிந்திருப்பார் முத்துராமலிங்கதேவர். மீண்டும் நவம்பர் 1 ஆம் தேதி மதுரை மாவட்ட ஆட்சியர் வங்கியில் தங்கக் கவசத்தை ஒப்படைக்கிறார்.