தங்கக் கவசத்திற்கு நானே பொறுப்பு... பிரச்சினையை தவிர்க்க கலெக்டரிடம் கொடுத்தோம் - ஓபிஎஸ்
தேவரின் தங்கக் கவசத்திற்கு நானே பொறுப்பாளர். என்னைத்தான் ஜெயலலிதா நியமித்துள்ளார் என்று ஓபிஎஸ் கூறினார்.
மதுரை: எங்களால் எந்த பிரச்சினையும் வந்து விடக்கூடாது என்பதற்காகவே தேவர் சிலைக்கு அணிவிக்கப்படும் தங்கக் கவசத்தை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டதாக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
பசும்பொன்னில் உள்ள தேவர் சிலைக்கு ஜெயந்தி விழாவின்போது அணிவிக்கும் வகையில் ஜெயலலிதாவால் கடந்த 2014ஆல் 13 கிலோ எடைகொண்ட தங்கக் கவசம் அ.தி.மு.க. சார்பில் வழங்கப்பட்டது. விழாவின் போது தேவருக்கு அணிவிக்கப்படும் இந்த கவசம் மதுரை அண்ணா நகரில் உள்ள பேங்க் ஆஃப் இந்தியா கிளையின் பெட்டகத்தில் பாதுகாப்பாக வைக்கப்படும்.
ஒவ்வொரு ஆண்டும் தேவர் ஜெயந்திவிழாவின்போது அதிமுகவின் பொருளாளரும், தேவர் நினைவாலயத்தின் நிர்வாகியும் வங்கிக் கிளைக்கு நேரில் சென்று அந்த தங்கக் கவசத்தைப் பெற்றுச் செல்வது வழக்கம். இந்த ஆண்டு வரும் 30ஆம் தேதி தேவர் ஜெயந்தி கொண்டாடப்பட உள்ளது.
அவருடைய சிலைக்கு அணிவிக்கும் தங்கக் கவசம், கிரீடத்தை மதுரை வங்கியில் வந்து பெற்றுக் கொள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மதுரைக்கு வந்தார். அதே இடத்திற்கு தினகரன் ஆதரவாளர்களும் வரவே சர்ச்சை வெடித்தது.
பலமணி நேர பேச்சுவார்த்தைக்குப் பின்னர், தங்கக் கவசம் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் பசும்பொன்னிற்கு பாதுகாப்புடன் பத்திரமாக எடுத்துச் சென்றார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம்,
அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா, தன்னைத்தான் தேவரின் தங்கக்கவசத்திற்கு பொறுப்பாளராக நியமித்தார். ஆண்டுதோறும் அக்டோபர் 27ஆம் தேதியன்று வங்கிக்கு வந்து பெட்டகத்தில் இருந்து எடுத்து சென்று தேவர் சிலைக்கு அணிவிப்போம்.
இதற்கான அத்தாட்சியை பேங்க் ஆப் இந்தியா தமக்கு வழங்கியுள்ளது. கவசத்தை அறங்காவலர் நிர்வாகியிடம் ஒப்படைப்பதற்கு ஆட்சேபம் இல்லை என்று கூறிய டி.டி.வி.தினகரன் அணி இன்று திடீரென வந்து உரிமை கோரியது ஏன்?
சசிகலா தற்காலிகமாக பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டவர்தான். அவரது நியமனமும் தற்காலிகமானதே. எனினும் ஆட்சியில் உள்ள தங்களினால் எந்த சர்ச்சையும், சங்கடமும் ஏற்படக்கூடாது என்று கருதியே தங்க கவசம் மதுரை ஆட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டது என்றார்.
தங்கக் கவசத்தை அணிவிக்கும் போது நாங்கள் அருகில் இருப்போம் என்றும் ஒபிஎஸ் கூறினார்.