பால்குடம், முளைப்பாரியுடன் தொடங்கியது பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை
54வது தேவர் குருபூஜை மற்றும் 109வது தேவர் ஜெயந்தி விழா பசும்பொன் கிராமத்தில் நேற்று பால் குடம், முளைப்பாரியுடன் தொடங்கியது.
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவரின் 54வது குருபூஜை மறறும் 109வது ஜெயந்தி விழா நேற்று தொடங்கியது.
3 நாட்களுக்கு நடைபெறும் விழாவில் முதல் நாளான நேற்று ஆன்மீக விழாவாகக் கொண்டாடப்பட்டது. இன்று அரசியல் விழா கொண்டாடப்படும். நாளை குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா கொண்டாடப்படும்.
நேற்று காலை 6 மணிக்கு தேவர் நினைவிடத்தில் மங்கல மேளத்துடன் யாகங்கள் மற்றும் பூஜைகள் தொடங்கின. வேதங்களை ஓதி, திருவாசகம் உள்ளிட்ட பாடல்களைப் பாடினர். ஏராளமான பெண்கள் முளைப்பாரி, பால்குடம் எடுத்துவந்து தேவர் நினைவாலயத்தில் உள்ள தேவரின் சிலைக்கு அபிஷேகம் செய்தனர்.
பொதுமக்கள் நேர்த்திகடனாக மொட்டையடித்து முடிக் காணிக்கை செலுத்தினர். தேவரின் நினைவாலயத்தின் எதிரே அமைந்துள்ள தியான மண்டபத்தில் தியானம் செய்து சென்றனர். மாலையில் 1,108 திருவிளக்கு பூஜையும், இரவில் அலங்கரிக்கப்பட்ட தேவரின் ஐம்பொன் சிலை பசும்பொன் கிராமத்தை சுற்றிவரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. தொடந்து, ஆன்மிக சொற்பொழிவுகள் நடைபெற்றன.
இன்று லட்சார்ச்சனை பூஜை நடைபெற்றது. தொடர்ந்து அரசியல் விழா நடைபெறுகிறது. நாளை தேவர் குருபூஜை மற்றும் ஜயந்தி விழா நடைபெற உள்ளது. இதில், அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளனர்.
குருபூஜை மற்றும் தேவர் ஜெயந்தியையொட்டி தென் மாவட்டங்களில் பலத்த பாதுகாப்பும் பல பகுதிகளில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.