பசும்பொன்னில் தொடங்கியது முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை
பசும்பொன்: ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் தேவர் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா இன்று தொடங்கியது.
இது 51வது குருபூஜை மற்றும் 106வது ஜெயந்தி விழாவாகும். காலையில், தேவர் நினைவிடப் பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன் முன்னிலையில், கோவை காமாட்சிபுரி ஆதீனம் குரு மகாசன்னிதானம் ஞானகுரு சாக்தஸ்ரீ சிவலிங்கேஸ்வரர் சுவாமிகள் தலைமையில் லட்ச்சார்ச்சனை நடைபெற்றது.
9 மணிக்கு தேவர் நினைவிடம் அருகே உள்ள கலையரங்க வளாகத்தில் மதுரை சன் கண் மருத்துவமனையும், தேவர் நினைவாலய நிர்வாகத்தினரும் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமைத் தொடங்கினர்.
இன்று மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜையும், இரவு 9 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேவரின் ஐம்பொன் சிலை தேரோட்ட உற்சவமும் நடைபெறுகிறது.
நாளை, செவ்வாய்க்கிழமை காலையில் லட்சார்ச்சனையும் இரவு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.
புதன்கிழமை, 30-ம் தேதி காலை 6 மணிக்கு பசும்பொன் தேவர் 51-வது குருபூஜையை 33 அபிஷேகங்களுடன் ஞானகுரு சாக்தஸ்ரீ சிவலிங்கேஸ்வரர் சுவாமிகள், தனது ஆதீன குழுவினருடன் நடத்துகிறார்கள்.
அதன் பின்னர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன. தமிழக அரசு சார்பில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறவுள்ள 106ஆவது ஜெயந்தி விழாவில் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், உள்ளிட்ட பலரும் பங்கேற்கிறார்கள்.
அமைச்சர்கள், கட்சித் தலைவர்கள், அமைப்புகளின் தலைவர்கள் தொடர்ந்து அஞ்சலி செலுத்துவர். அவரவர்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் வந்து அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
தேவர் குருபூஜையையொட்டி பசும்பொன் கிராமம், ராமந்தபுரம், சிவகங்கை, மதுரை மாவட்டங்களில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு கட்டுப்பாடுகள், உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், சாலைத் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வாகனக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை காலை கமுதியில் போலீஸ் படையினரின் கொடிஅணிவகுப்பு நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.என்.மயில்வாகனன் உத்தரவின்பேரில் அதிரடிப் படை காவல் கண்காணிப்பாளர் கருப்பசாமி தலைமையில் 200க்கும் மேற்பட்ட அதிரடி போலீஸார் சிங்கப்புளியாபட்டி, வெள்ளையாபுரம், தெற்குத்தெரு, நாடார் பஜார், மேட்டுத் தெரு, பஸ் நிலையம் சாலை, குண்டாறு பாலம் வரை அணிவகுத்து சென்றனர்.
திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்
திமுக சார்பில் அக்டோபர் 30ம் தேதி பசும்பொன் தேவர் நினைவிடத்தில் கட்சிப் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான குழுவினர் அஞ்சலி செலுத்துகின்றனர்.