பசும்பொன்னில் தேவர் குருபூஜை விழா: அமைச்சர்கள் அஞ்சலி... தடையை மீறியவர்கள் மீது போலீஸ் தடியடி
ராமநாதபுரம்: பசும்பொன்னில் நடைபெற்ற தேவர் குருபூஜை விழாவில் அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். தடையை மீறி பேரணியாக செல்ல முயன்றவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவரின் 106வது பிறந்த நாள் மற்றும் 51வது குருபூஜை விழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.
இந்த விழாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பால்குடம் எடுத்தும், பொங்கல் வைத்தும் அஞ்சலி செலுத்தினர்.
தமிழக அமைச்சர்கள்
தேவர் நினைவிடத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்புறவளர்ச்சி துறை அமைச்சர் வைத்தியலிங்கம் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
சென்னையில் ஜெயலலிதா
சென்னை நந்தனம், அண்ணா சாலையில் அமைந்துள்ள பசும்பொன் முத்து ராமலிங்கத் தேவர் சிலைக்கு, அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதிமுகவினர் பங்கேற்பு
இந்த நிகழ்ச்சியில், தலைமைக்கழக நிர்வாகிகளும், அமைச்சர்களும், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், கட்சியின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளும், கட்சி தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
தடையை மீறி பேரணி
பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவிற்கு வெளியூர்களில் இருந்து வாகனங்களில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் காவல்துறையின் தடையை மீறி பசும்பொன் நோக்கி ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோர் பேரணியாக பசும்பொன் நோக்கி பயணம் மேற்கொண்டனர்.
போலீஸ் தடியடி
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகே இடைச்சியூரணியில் காவல்துறை தடியடி நடத்தியதில் இருவரின் மண்டை உடைந்தது. இதனையடுத்து கடலாடி - முதுகுளத்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டதால் பதற்றம் உருவானது. பதற்றத்தை தணிக்க அரச படையினர் ஆயுதங்களுடன் குவிக்கப்பட்டுள்ளனர்.