குருபூஜை முன்னெச்சரிக்கை: சிவகங்கையிலும் 144 தடை உத்தரவு!
சிவகங்கை: தேவர் ஜெயந்தி மற்றும் மருதுபாண்டியர் குருபூஜை விழாவையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்து ஆட்சியர் அறிவித்துள்ளார்.
பசும்பொன்னில் நடை பெறும் தேவர் ஜெயந்தி விழாவையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏற்கனவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேவர் ஜெயந்தி விழாவுக்கு வருபவர்கள் சொந்த வாகனங்களில் மட்டுமே வரவேண்டும் என்று போலீசார் கட்டுப்பாடு விதித்துள்ளனர்.
இந்நிலையில், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ராஜாராமன் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், கூறப்பட்டுள்ளதாவது:
''நாளை திருப்பத்தூரிலும், வருகிற 27 ஆம் தேதி காளையார் கோவிலிலும் மருது பாண்டியர் குருபூஜை விழா நடைபெற உள்ளது.
வருகிற 30 ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி விழா நடைபெற உள்ளது. இதையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் வருகிற 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.