திமுக ஆட்சியில் மதுரை விமான நிலையத்திற்கு தேவர் பெயர் சூட்டுவோம் - ஸ்டாலின் உறுதி
திமுக ஆட்சியில் மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத்தேவர் பெயர் சூட்டப்படும் என்று எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
ராமநாதபுரம்: தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தி.மு.க. ஆட்சி அமைந்ததும் மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவரின் பெயரை சூட்ட நடவடிக்கை எடுப்போம் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சுதந்திரப் போராட்ட வீரரும், பார்வர்டு பிளாக் கட்சித் தலைவருமான முத்துராமலிங்கத் தேவர் 110-வது ஜெயந்தி விழா மற்றும் 55-வது குரு பூஜை ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள அவரது சொந்த ஊரான பசும்பொன் கிராமத்தில் இருக்கும் தேவர் நினைவிடத்தில் கடந்த சனிக்கிழமை தொடங்கியது.
இன்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கோரிப்பாளையத்தில் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அவர் பசும்பொன்னில் அமைந்துள்ள தேவர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
ஸ்டாலின் அஞ்சலி
பசும்பொன்னில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், தெய்வீக திருமகன் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 110-வது ஜெயந்தி விழா மற்றும் 55-வது குருபூஜை இன்று நடைபெற்று வருகிறது. தேவர் திருமகனின் புகழை போற்றும் வகையில் முதல்வராக இருந்த கலைஞர் மதுரை கோரிப்பாளையத்தில் தேவருக்கு பிரமாண்ட சிலை எழுப்பி பெருமை சேர்த்தார் என்றார்.
தேவருக்கு அணையா விளக்கு
பசும்பொன் கிராமத்தில் தேவர் நினைவிடத்தில் நூற்றாண்டு விழா கொண்டாடுகின்ற நேரத்தில் மணிமண்டபம், அணையா விளக்கு அமைத்து தந்தவர் கருணாநிதி என்று கூறினார்.
ஜாதி,மதம் கடந்த தலைவர்
வேற்றுமையில் ஒற்றுமை காணக்கூடிய ஏழை, எளிய மக்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் விவசாய பெருங்குடி மக்கள் எல்லாத்தரப்பு மக்களும் போற்றுகின்ற மாபெரும் தலைவராக விளங்கியவர் தேவர் பெருமகனார்.
ஜெயந்தி விழாவில் மரியாதை
ஜாதி, மதம் கடந்து அனைத்து மக்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று பாடுபட்ட பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழாவில் கலந்து கொண்டு அவருக்கு மரியாதை செலுத்துவதை திராவிட முன்னேற்றக்கழகம் பெருமையாக கருதுகிறது.
குதிரை பேர ஆட்சி
பசும்பொன் தேவருக்கு புகழ் சேர்க்கும் வகையில் மதுரை விமான நிலையத்திற்கு தேவர் பெயரை சூட்ட வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ச்சியாக எழுப்பப்பட்டு வருகிறது. தற்போது தமிழகத்தில் குதிரைபேர ஆட்சி நடத்தி வரும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மதுரை விமான நிலையத்திற்கு தேவர் பெயரை சூட்ட மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.
திமுக ஆட்சியில் தேவர் பெயர்
இல்லையென்றால் தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தி.மு.க. ஆட்சி அமைந்ததும் மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவரின் பெயரை சூட்ட வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கைக்கு உரிய குரல் கொடுத்து நடவடிக்கை எடுப்போம் என்று ஸ்டாலின் கூறினார்.