கட்டுக்கட்டாய் பணத்தை போட்டு படுத்துறங்கிய கொள்ளையன் கைது
சென்னை: பஞ்சு மெத்தையில் படுத்துறங்குவதே சிலரால் முடியாத காரியமாய் இருக்க சென்னையில் கொள்ளையடித்த பணத்தை மெத்தையாக போட்டு படுத்துறங்கிய பலே கொள்ளையனை போலீசார் கைது செய்துள்ளனர். இப்போது அந்த கொள்ளையன் சிறையில் கட்டாந்தரையில் அமர்ந்து கம்பி எண்ணி வருகிறான்.
சென்னை முகப்பேர் கிழக்கு ஜெ.ஜெ.நகர் நகர் பகுதியில் சமீபகாலமாக கொள்ளை, வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்கள் அதிகளவில் நடைபெறுவதாக புகார் வந்தது. இதில், ஒரு சில குற்ற செயல்களில் ஈடுபட்ட திருடர்கள் சிக்கினாலும், தொடர்ந்து சங்கிலி தொடராக கொள்ளை, வழிப்பறி போன்ற செயல்களில் நூதன முறையில் ஈடுபட்டு வரும் கொள்ளையர்கள் போலீசார் சிக்காமல் இருந்து வந்தனர்.
இதுபோன்ற கொள்ளையர்கள் பெரும்பாலும் இளைஞர்களாக இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து, திருமங்கலம் போலீஸ் உதவி கமிஷனர் சுப்ரமணியன் தலைமையில் ஜெ.ஜெ.நகர் போலீசார் தனிப்படை அமைத்து கடந்த சில மாதங்களாக கொள்ளையர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில், ஜெ.ஜெ.நகரில் நடந்த ஒரு கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய 2 இளைஞர்கள், பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கம் பகுதியில் பதுங்கி இருப்பதாக அண்ணாநகர் காவல்நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, தனிப்படை போலீசார் மாறுவேடத்தில் காட்டுப்பாக்கத்தில் உள்ள ஒரு விடுதிக்கு சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது, அந்த விடுதியில் உள்ள ஒரு அறையில் பணக்கட்டுகளை பரப்பிவிட்டு அதன் மேல் ஜாலியாக ஒரு வாலிபர் படுத்து இருந்துள்ளார். உடனே அந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை செய்ததில் அவர், கொடுங்கையூர் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த ராஜ்குமார் (வயது 29) என்பதும், அவர் தனது கூட்டாளி ஒருவருடன் சேர்ந்து சென்னை ஜெ.ஜெ.நகர், நொளம்பூர், திருமங்கலம், அண்ணாநகர், வேளச்சேரி, வில்லிவாக்கம், பள்ளிக்கரணை, சிட்லபாக்கம் போன்ற பகுதிகளில் தொடர் கொள்ளை, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் தெரிந்தது. இதையடுத்து ராஜ்குமாரை போலீசார் கைது செய்தனர்.
மேலும், அவர் கொடுத்த தகவலின் பேரில் அவரது கூட்டாளியான கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த மேலமாத்தூர் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியதாஸ் (28) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் இருவர் மீது 25க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
ராஜ்குமார், தான் தங்கி இருந்த விடுதி அறையில் கொள்ளை அடித்த பண கட்டுகளின் மீது படுத்து தூங்கியபோது தான் போலீசாரிடம் சிக்கி உள்ளான். இரண்டு பேரிடம் இருந்தும் 40 பவுன் நகைகள், ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
மேலும் அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், கொள்ளை அடித்த பணத்தில் 2 பேரும் மது, மாது என உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களில் ராஜ்குமார், கல்லூரி மாணவர் போன்று தோற்றம் அளிப்பதால் அவர், தான் கொள்ளையடித்த பணம், ஆடம்பர மோட்டார் சைக்கிளை காட்டி இளம்பெண்களை மயக்கி அவர்களை ண்ணை வீடு, பீச் போன்ற விடுதிகளுக்கு அழைத்து சென்று அவர்களுக்கு விருந்து வழங்கி உள்ளனர் என்பதும் தெரிய வந்துள்ளது.
இவர்கள் சென்னை மட்டுமின்றி தமிழகத்தில் மேலும் பல இடங்களிலும் தங்கள் கைவரிசையை காட்டி உள்ளனர். கைதான 2 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.