‘அம்மா’ பெயரில் முதியோர் இல்லம் கட்டணும்.. பூட்டிக் கிடந்த வீடுகளில் திருடிய ‘பவுடர்’ சேகர் கைது
தன் தாய் பெயரில் முதியோர் இல்லம் தொடங்குவதற்காக கொள்ளையடித்த திருடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை: தனது தாயின் பெயரில் முதியோர் இல்லம் தொடங்குவதற்காக ஆறு வீடுகளில் சுமார் 120 சவரன் நகைகளைத் திருடிய பாசக்கார திருடனை சென்னைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் சேகர். பிரபல திருடனான இவர், கஞ்சா, ஹெராயின் போன்ற போதைப் பவுடர்களை விற்று வந்ததால், இவரை பவுடர் திருடன் எனக் கூறுவர். இவர் மீது சென்னையில் பல்வேறு காவல் நிலையங்களில் பல கொள்ளை வழக்குகள் உள்ளன.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை திருட்டு தொழிலில் பிரபலமாக இருந்த சேகர், பின்னர் திருந்தி வாழப்போவதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து போதை மறுவாழ்வு மையத்தில் சேர்ந்து, தனது தீயபழக்கங்களில் இருந்து திருந்தினார்.
பிறகு எந்தக் குற்றச் செயல்களிலும் ஈடுபடாமல் இருந்த சேகர், தன்னைப் போன்றவர்களின் வாழ்க்கையை திருத்தும் முயற்சியாக, போதை மறுவாழ்வு மையத்தை தொடங்கி நடத்தி வந்தார். போலீசாரே பாராட்டும் வகையில் இவரது சமூகசேவை நடவடிக்கைகள் இருந்தன. போதைக்கு அடிமையானவர்களைத் தேடிக் கண்டுபிடித்து இலவசமாக அவர்களுக்கு சிகிச்சை அளித்து வந்தார்.
இந்நிலையில், சமீபகாலமாக சென்னை நொளம்பூர் மற்றும் முகப்பேர் பகுதிகளில் பூட்டிக் கிடந்த வீடுகளில் அடுத்தடுத்து கொள்ளைச் சம்பவங்கள் நடைபெற்றன. போலீசாரின் விசாரணையில், அனைத்து வீடுகளிலும் திருடியது ஒரே நபர் எனத் தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து, கொள்ளை நடந்த வீடுகளில் கிடைத்த கைரேகைகளை பழைய குற்றவாளிகளின் கைரேகைகளோடு போலீசார் ஒப்பிட்டு பார்த்தனர்.
அதில், சம்பவ இடத்தில் கிடைத்த அனைத்து கைரேகைகளும் சேகருடையது என உறுதியானது. இது தொடர்பாக சேகரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, தான் திருந்தி வாழ்வதாகவும், நடந்த கொள்ளைச் சம்பவங்களுக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், ஆதாரங்கள் அனைத்தும் சேகருக்கு எதிராக இருக்கவே, அவரைக் கைது செய்த போலீசார், மீண்டும் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். ஆரம்பத்தில் குற்றங்களை மறைத்த சேகர், பின்னர் அவற்றை தான் செய்ததாக ஒப்புக் கொண்டார். இது குறித்து போலீசாரிடம் அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில் பல அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிவந்துள்ளன.
போதை மறுவாழ்வு மையம் நடத்தி சேவை செய்து வரும் சேகருக்கு, அடுத்ததாக தனது தாயாரின் பெயரில் முதியோர் இல்லம் ஒன்று ஆரம்பிக்க வேண்டும் என்ற ஆசை உண்டானது. ஆனால், அதற்கு தேவையான நிதி இல்லை. எனவே, தனது பணத்தேவைகளுக்காக பூட்டிக் கிடந்த ஆறு வீடுகளில் அவர் திருடியுள்ளார்.
திருடிய நகைகளில் சிறிதளவை விற்று திருவொற்றியூர் பகுதியில் முதியோர் இல்லம் கட்டுவதற்காக இடம் ஒன்றையும் அவர் வாங்கிப் போட்டுள்ளார். விரைவில் அங்கு முதியோர் இல்லம் கட்ட திட்டமிட்டிருந்த வேளையில் தான் போலீசாரிடம் சிக்கிக் கொண்டதாக சேகர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
சேகர் கொள்ளையடித்த மொத்த நகைகளின் மதிப்பு 120 சவரன் எனப் போலீசார் தெரிவித்துள்ளனர். இதில் இடம் வாங்கியது போக மீதமிருந்த 50 சவரன் நகைகளைப் போலீசார் மீட்டுள்ளனர்.
சேகர் தற்போது கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் அர்ஜூன் நாயகனாக நடித்த ஜெண்டில்மேன் படத்தில் நாயகன் இப்படித்தான் தான் கொள்ளையடித்த பணத்தில் மருத்துவக் கல்லூரி கட்டி மக்களுக்கு நல்லது செய்ய விரும்புவார். அது போன்று, சினிமா பாணியில் கொள்ளையடித்து முதியோர் இல்லம் கட்ட திருடன் முயற்சித்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேகர்னு பெயர் இருந்தாலே சிக்கல் தான் போல!