3-வது அணி முயற்சி... எங்கே செல்லும் திமுகவின் இந்தப் பாதை?
திமுகவின் 3-வது அணி முயற்சி அப்பட்டமான பிழை என்பது அரசியல் பார்வையாளர்கள் கருத்து.
Recommended Video
சென்னை: தேசிய அளவில் 3-வது அணியை உருவாக்கும் திமுகவின் முயற்சியானது மிகக் கடுமையான விமர்சனங்களுக்குள்ளாகியிருக்கிறது. இது நிச்சயம் திமுகவின் தற்கொலை முயற்சிதான் என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்து.
தேசிய அளவில் 3-வது அணி என்பது முழுமையான வெற்றியை ஒரு காலத்திலும் பெற்றதே கிடையாது. 1977, 1989, 1996 காலங்களில் 3-வது அணியானது ஒளிக்கீற்று போல தோன்றி மறைந்து போன ஒன்றுதான்.
அது நிரந்தரமான ஒன்றாக இருந்ததே கிடையாது. தற்போதைய அரசியல் சூழலில் 3-வது அணி முயற்சி என்பது அப்பட்டமாக பாஜகவுக்கு உதவக் கூடியதுதான் என்பதை நாடு நன்கறியும்.
பாஜகவின் மதவாத ஆட்சிக்கு எதிராக அனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஓரணியில் திரட்டி மிக வலிமையான ஒரு அணியை காங்கிரஸ் தலைமையில் உருவாக்குவதுதான் இப்போதைய வியூகமாக இருக்க வேண்டும். ஆனால் இதற்கு மாறாக காங்கிரஸ், பாஜக அல்லாத ஒரு அணி என பல்லவி பாடுவது என்பது பாஜகவுக்கு முட்டுக் கொடுக்க மட்டுமே.
தமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுகவின் வாக்கு வங்கி சரிந்தும் சிதைந்தும் கிடக்கிறது. ஜெயலலிதா மறைந்து ஒன்றரை ஆண்டுகளாகிவிட்ட நிலையில் திமுக செயல் தலைவர் ஸ்டாலினால் ஒரு துரும்பைக் கூட அசைக்க முடியவில்லை.
எதையாவது ஸ்டாலின் செய்ய வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு. அதை செய்யக் கூடிய வல்லமை ஸ்டாலினிடம் இல்லை. இதை மறைப்பதற்காக எங்கப்பா கொல்லைப்புற வழியில் ஆட்சியை பிடிக்கக் கூடாது என சொல்லியிருக்கிறார் என ஸ்டாலின் பேசுவது ரசிக்கத்தக்கது அல்ல.. வெறுப்பை ஏற்படுத்தக் கூடியது.
இதனால் மக்களிடம் அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது என்கிற விவரமாவது ஸ்டாலினிடம் தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும். ஜெயலலிதா மறைந்த உடனேயே அதிமுகவை பலவீனப்படுத்தி இருக்கிற அத்தனை கட்சிகளையும் தமது அணிக்கு கொண்டு வந்திருக்க வேண்டியது திமுகவின் வியூகமாக இருந்திருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் பாஜக இந்த அளவுக்கு ஆட்டம் போட்டிருக்காது.. ரஜினி, கமல் ஆகியோருக்கு அரசியல் ஆசையும் வந்திருக்காது.
இதைவிட்டுவிட்டு "ஏதோ" காரணங்களுக்காக ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ்-க்கு முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கிற வியூகங்களை வகுப்பது, மத்திய அரசுக்கு வலிக்காத போராட்டங்களை அறிவிப்பது, நானும் சிறைக்கு போகிறேன் என்கிற வகையில் செயல்படுவது எல்லாமே நகைப்புக்குரியதுதான். இதன் உச்சமாகத்தான் இப்போது 3-வது அணி முயற்சியில் இறங்கியிருக்கிறார் ஸ்டாலின்.
காங்கிரஸ், பாஜக அல்லாத அணிதான் 3-வது அணி முதலில் பிரகடனம் செய்தவர் சந்திரசேகர ராவ். காங்கிரஸும் வந்தால் சேர்ப்போம் என்றவர் மமதா பானர்ஜி. ஆனால் சென்னையிலோ, காங்கிரஸையும் உள்ளடக்கிய அணி என பல்டி அடித்தார் சந்திரசேகர ராவ். காங்கிரஸ் அல்லாத 3-வது அணி என்பது பாஜகவின் பி டீம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
அப்படி பாஜகவின் பி டீமாக செயல்பட திமுக முடிவெடுத்துவிட்டால் இந்த பேரியக்கத்துக்கு இறுதி அத்தியாயம் எழுதப்படுகிறது என்பதைத் தவிர வேறு எதுவும் சொல்வதற்கில்லை என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். நிச்சயமாக இப்படியான ஒரு முயற்சி திமுகவுக்கு தற்கொலை முடிவுதான் என்பதும் அவர்களது கருத்து.
பாஜகவின் முகமூடியோடு செயல்பட்டால் மக்களுக்கு தெரியாது என திமுக தலைமை நினைத்து கொண்டிருந்தால் அதைவிட அறியாமை உலகத்தில் எதுவும் இல்லை. அப்படித்தான் நினைப்போம் என்றால் தமிழக அரசியலில் இன்னொரு தேமுதிகவாக திமுக ''பரிணமிக்கும்' என்பதிலும் சந்தேகம் இல்லை என்கின்றனர் அரசியல்பார்வையாளர்கள்.