காங்கிரஸ் ஆட்சியமைக்க 3வது அணி ஆதரவு தரும்… சொல்வது 'ஏர்போர்ட் நாசா'
சென்னை: காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க 3வது அணி ஆதரவு தெரிவிக்கும் என்று மத்திய இணையமைச்சர் நாராயணசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது:
இரண்டு நாட்களுக்கு முன்பே சென்னை குண்டுவெடிப்பு குறித்து மத்திய அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது என்றும், தீவிரவாதிகள் ஊடுருவல் குறித்து தக்க சமயத்தில் தகவல் அளிக்கப்படுகிறது.
மத்தியில் பாரதியஜனதா கட்சி கனவிலும் கூட ஆட்சி அமைக்க முடியாது. அதே சமயம் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க 3வது அணி ஆதரவு அளிக்கும் என்றும் நாராயணசாமி கூறினார்.
ராகுல் கருத்து
3வது அணிக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்கும் என்று மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியிருந்த நிலையில், 3வது அணிக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்காது என்றும், காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்றும், அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
நாராயணசாமி கருத்து
இந்நிலையில், இரண்டு பேரின் கருத்து மாற்றாக காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க 3வது அணி ஆதரவு அளிக்கும் என்று மத்திய அமைச்சர் நராயணசாமி கூறியிருக்கிறார்.
மக்கள் தீர்ப்பு
முன்னதாக காரைக்காலில் பேசிய நாராயணசாமி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஏராளமான நலத் திட்டங்களை கொண்டு வந்துள்ளது. இவைகளை நாம் முறையாக மக்களிடம் கொண்டு செல்லாததால் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. எனினும், தேர்தலில் மக்கள் அளிக்கும் தீர்பை காங்கிரஸ் கட்சி முழு மனதோடு ஏற்கும் என்றும் நாராயணசாமி கூறியுள்ளார்.