தமிழகத்தில் 3வது அணி அமைய வாய்ப்பு உள்ளது: தா. பாண்டியன்!
தஞ்சாவூர்: தமிழகத்தில் லோக்சபா தேர்தலின் போது 3வது அணி அமைய வாய்ப்பு உள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலர் தா. பாண்டியன் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூரில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் அதிமுக, திமுக என இரு அணிகள் உறுதி. அத்துடன் 3 வது அணி அமையவும் வாய்ப்புள்ளது.
பெரும்பான்மை வராது
தேசிய அளவில் காங்கிரஸ், பாஜகவுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்காது.
எப்படி கூட்டணி?ஆட்சி?- ஆரூடம்
மாநிலங்களில் மாநிலக் கட்சிகள், இடதுசாரி கட்சிகள் வலுவாக உள்ளன. இதனால் மாநிலக் கட்சிகளும், இடதுசாரி கட்சிகளும் இணைந்து 3வது அணியை அமைக்க வாய்ப்புகள் இருக்கின்றன. தேர்தலுக்கு முன்போ, பின்போ மூன்றாவது அணியுடன் இணைந்து கூட்டு அமைச்சரவை அமையலாம்.
கூட்டம் வரும்.. ஆனா ஓட்டு வராது..
தமிழகத்துக்கு பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வந்தால் கூட்டம் சேரும்.ஆனால், தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் ஒரு தொகுதியில்கூட அவரது ஆதரவாளர்கள் வெற்றி பெற முடியாது.
அதிக காற்றாலை மின் உற்பத்தி இங்கதான்
இந்தியாவில் மிக அதிக அளவில் காற்றாலை மின் உற்பத்தி செய்யும் மாநிலமாக தமிழகம் உள்ளது. ஆனால் அந்த மின்சாரத்தைக் கொண்டு செல்வதற்கான வழித்தடம் அமைக்கப்படாததால், மின் உற்பத்தி பாதிக்கப்படுகிறது.
மின் கம்பிக்கு ரூ1500 கோடி தரலை..
இதற்கான மின் கம்பி அமைக்க ரூ.1,500 கோடி வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. ஆனால், ஓராண்டு காலமாக அதை மத்திய அரசு வழங்காமல் உள்ளது.
வடமாகாண தேர்தல்..
இலங்கை வடக்கு மாகாணத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றிருப்பதையும், அச்சமின்றி வாக்களித்த மக்களையும் வாழ்த்துகிறோம். இது ஒரு பேரலை என்பதால், இந்த வாய்ப்பை ஏற்று, இலங்கையில் தமிழ் மக்கள் கெüரவமாகவும், முழு மனித உரிமையுடனும் வாழ்வதற்கு ஏற்ற அரசியல் சூழ்நிலையைக் கொண்டு வர இந்திய அரசு தனது செல்வாக்கை நிலைநிறுத்த வேண்டும் என்றார்.