திகிலூட்டும் திருச்செங்கோடு... அன்று பெருமாள் முருகன், நேற்று கோகுல்ராஜ், இன்று விஷ்ணுப்பிரியா!
சென்னை: திருச்செங்கோடு என்றாலே பயந்து நடுங்கும் அளவுக்கு நிலைமை ஏற்பட்டுள்ளது. அன்று மாதொருபாகன் என்ற நூலுக்காக பெருமாள் முருகன் என்ற எழுத்தாளர் தன் எழுத்தை நிறுத்தினார்... இன்று டிஎஸ்பி விஷ்ணுப்பிரியா தன் மூச்சையே நிறுத்தியுள்ளார். இந்த இரண்டிலுமே ஜாதியின் உக்கிரப் பிடி என்ற பொதுவான கருத்து அடிபடுவது கவனிப்புக்குரியது.
அதை விட முக்கியமாக திருச்செங்கோட்டை உள்ளடக்கிய நாமக்கல் மாவட்டம் சர்ச்சையில் சிக்குவது இது 3வது முறையாகும். முன்பு மாவட்ட எஸ்.பி சத்தியப்பிரியா பிரச்சினைக்குள்ளானார். அவர் இந்த அதிமுக அரசிடம் சிக்கி பட்ட பாடு மக்களுக்கு மறந்திருக்காது. அதன் பிறகு பெருமாள் முருகன் பிரச்சினை வெடித்தது. அவருக்கு கடும் மிரட்டல்களை விடுத்தனர் ஜாதிய சக்திகள். இதனால் தனது எழுத்தையே விட்டு விட்டு எழுத்துத் துறவறம் பூணும் நிலைக்குத் தள்ளப்பட்டார் பெருமாள் முருகன். இன்று டிஎஸ்பி விஷ்ணுப்பிரியாவின் உயிரை காவு வாங்கியுள்ளது இதே திருச்செங்கோடு.
இதில் என்ன ஒரு சோகமான ஒற்றுமை என்றால் இந்த 3 அதிர்ச்சி தரும் சம்பவங்களும் அதிமுக ஆட்சியில் நடந்தது என்பதுதான். இதில் இரண்டு பிரச்சினையில் ஜாதித் தீயின் கோரத்தைக் காண முடியும். ஒரு பிரச்சினைக்குக் காரணம் அரசுக்கு வந்த "ஈகோ".
அர்த்தநாரீஸ்வரர் பூமி
அர்த்தநாரீஸ்வரர் பூமி என்று திருச்செங்கோட்டை சொல்வார்கள். அப்படிப்பட்ட சிவ பூமியில் ஜாதித் தீ தலைவிரித்தாடுவது நிச்சயம் ஆச்சரியமானதுதான். அநீதியைப் பொசுக்கக் கூடிய சிவனின் தளத்திலேயே ஜாதித் தீயின் உக்கிரம், அதிலும் கொங்கு பூமியில் இப்படி ஒரு கோரத் தாண்டவம் நடைபெறுவது வியப்புக்குரியது.
சமத்துவம் இல்லையே
அம்மையும், அப்பனும் சம பாதி என்பதுதான் அர்த்தநாரீஸ்வர் அவதாரத்தின் தத்துவம். ஆனால் இங்கு சமத்துவம் கிடையாது. ஜாதியிலும் சரி, சமூகத்திலும் சரி. இங்கு பெண்கள் அடக்கப்பட்டே வந்துள்ளனர் - அக்காலம் முதல் இக்காலம் வரை. மாதொருபாகன் நூலில் பெண்களின் இழிநிலையைத்தான் பெருமாள் முருகன் விரித்துரைத்திரந்தார்.
மண்ணின் மைந்தரையே சகிக்க முடியாத திருச்செங்கோடு
பெருமாள் முருகன் திருச்செங்கோட்டைச் சேர்ந்தவர்தான். ஆனால் அவர் எழுதியதையே அந்த மண்ணைச் சேர்ந்த சிலரால் பொறுத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டபோது அனைவரும் அதிர்ந்தனர். ஜாதிய ரீதியாக அவர் எந்த அளவுக்கு அவமானப்படுத்தப்பட்டார் என்பதை உலகமே பார்த்தது.
தலித்துகளுக்கு பொறுக்காத மனங்கள்
இந்த பூமியில்தான் தொடர்ந்து தலித் விரோத செயல்கள் அதிகரித்து வருகின்றன. முதலில் கோகுல்ராஜ் கொடூரக் கொலை அரங்கேறியது. இன்னொரு சமூகப் பெண்ணைக் காதலித்தார் என்ற ஒரே காரணத்திற்காக கொடூரமாக கொலை செய்யப்பட்டார் கோகுல்ராஜ். அந்தக் கொலைக்குக் காரணமான புள்ளி இன்று வரை சுதந்திரமாக நடமாடிக் கொண்டுதான் இருக்கிறார்.
வழக்கை விசாரித்தவருக்கும் மரணமே முடிவு
இந்த கொலை வழக்கை விசாரித்து வந்தவர்தான் விஷ்ணுப்பிரியா. இவரும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்தான். இதுவே இவருக்கு பெரும் அடியாக மாறிப் போனது. நாலாபக்கமும் இருந்தும் அவருக்கு நெருக்குதல்கள் வந்ததாக கூறுகிறார்கள். உண்மையான குற்றவாளிகள் மீது காக்கியின் கரங்கள் படிந்து விடாமல் விஷ்ணுப்பிரியா நெருக்குதலுக்குள்ளாக்கப்பட்டார் என்று கூறுகிறார்கள்.
சத்தியப்பிரியாவை காவு கொண்ட நாமக்கல்
இதே திருச்செங்கோட்டை உள்ளடக்கிய நாமக்கல் மாவட்ட எஸ்.பியாக இருந்த சத்தியப்பிரியா சந்தித்த சோதனைகள் அனைவரும் அறிந்தது. ஆனால் சத்தியப்பிரியா திராட்டில் விடப்படுவதற்கு அரசின் ஈகோ பிரச்சினையே காரணம். படாதபாடுபட்டபோதிலும் விடாமல் போராடிய சத்தியப்பிரியா கடைசியில் ஜெயித்தார். உச்சநீதிமன்றத்தின் உத்தரவால் பணியை மீண்டும் பெற்றார்.
ஊர் பெயரைக் கெடுக்கும் அவலங்கள்
சிவபூமியாக கருதப்படும் திருச்செங்கோட்டின் பெயரைக் கெடுக்கும் இதுபோன்ற அவலங்கள் தடுக்கப்பட வேண்டும்.