ஆரியங்காவு ஐயப்பன் கோவிலில் இன்று திருக்கல்யாணம்
ஆரியங்காவு: தமிழக-கேரள எல்லையான ஆரியங்காவில் இருக்கும் ஐயப்பன் கோவிலில் இன்று திருக்கல்யாணம் நடைபெறுகிறது
தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ளது அருள்மிகு ஐயப்பன் கோவில். இங்கு ஐயப்பன் அய்யனாக காட்சி அளிக்கிறார். இங்குள்ள ஐயப்பன் தனது மனைவி புஷ்பகலா தேவியோடு அருள் பாலிக்கிறார். இந்த ஆலயத்தில் மண்டல பூஜை கடந்த 15ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது .இங்குள்ள அய்யனுக்கும், சவுராஷ்டிரா சமுதாய பெண்ணுக்கும் திருமணம் நடந்ததாக வரலாற்று செய்திகள் கூறுகின்றன.
ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் இந்த ஆலயத்தில் திருக்கல்யாணம் நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருக்கல்யாணம் இன்று நடைபெறுகிறது. முன்னதாக நேற்று முன்தினம் மாலை மாம்பலத் துறையில் இருந்து புஷ்பகலா தேவியை பெண் அழைத்து வரும் வைபோகம் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள், சவுராஷ்டிரா சமுதாயத்தினர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து நேற்று இரவு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. தொடர்ந்து இன்று இரவு சாமி ஐயப்பனுக்கு புஷ்கலா தேவிக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை சவுராஷ்டிரா சமுதாயத்தினரூம், ஆரியங்காவு ஆலய நிர்வாகத்தினரும் செய்து வருகின்றனர்.