உணவு தராததால் தங்கை அடித்துக் கொலை- தலைமறைவாக இருந்த அண்ணன் கைது
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் தங்கையை கொலை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த அண்ணனை போலீசார் கைது செய்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே கோட்டமருதூர் கிராமத்தை சேர்ந்தவர் பங்காரு. இவரது மகள் லில்லிமேரி (22), மகன் குழந்தையேசு (36). விவசாய கூலி தொழிலாளியான குழந்தையேசு, கடந்த 2011-ம் ஆண்டு தனது தங்கையைக் கொலை செய்தார்.
வேலையிலிருந்து திரும்பிய குழந்தையேசுவுக்கு மேரி சரிவர சாப்பாடு தரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் உண்டான வாக்குவாதத்தில், குழந்தையேசு தாக்கியதில் பலத்த காயமடைந்த மேரி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுதொடர்பாக மணலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையேசுவை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த குழந்தையேசு ஜாமீன் காலம் முடிந்தும் கோர்ட்டில் ஆஜராகாமல், கடந்த 10 மாதமாக தலை மறைவாக இருந்து வந்தார்.
இந்நிலையில், குழந்தையேசு கோட்டமருதூரில் உள்ள அவரது வீட்டின் அருகில் பதுங்கி இருப்பதாக மணலூர்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து அங்கு விரைந்து சென்ற போலீசார் குழந்தையேசுவைக் கைது செய்து திருக்கோவிலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மீண்டும் சிறையில் அடைத்தனர்.