அறநிலையத் துறை அதிகாரி திருமகளுக்கு நிபந்தனை ஜாமீன்
கும்பகோணம்: சிலை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட இந்து அறநிலையத் துறை அதிகாரி திருமகளுக்கு கும்பகோணம் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் புன்னைவன நாதர் சன்னதியில் மயில் வடிவிலான அம்பாள் அலகில் மலரை ஏந்தியபடி சிவனுக்கு பூஜை செய்யும் மிகப் பழமையான சிலை இருந்தது.
இந்த கோயிலில் 2004-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது திருப்பணி நடந்த போது மயில் சிலை சேதமடைந்து விட்டதாக கூறி புதிய சிலையை நிறுவி இருக்கிறார்கள். ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் 'பழமையான மயில் சிலை மாயமாகி 14 ஆண்டுகள் ஆகியும் இதுவரை புகார் கூட தெரிவிக்கவில்லை' என்று குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து, நீதிமன்றத்துக்கு அறிக்கை கொடுப்பதற்காக அறநிலையத்துறை தகவல் திரட்டிய போது அலகில் மலருடன் கூடிய மயில் சிலைக்குப் பதிலாக அலகில் பாம்புடன் கூடிய மயில் சிலை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பழைய சிலை என்ன ஆனது என்பது குறித்த விபரங்கள் யாருக்கும் தெரியவில்லை.
2004-ல் கும்பாபிஷேகம் நடந்த போது பழமையான மயில் சிலையும், ராகு, கேது சிலைகளும் மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் மயில் சிலை மாயமான வழக்கில் திருமகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் டிஎஸ்பி குமார் தலைமையிலான அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். பின்னர் அவரை கும்பகோணத்தில் உள்ள நீதிபதி வீட்டில் நேற்று இரவு ஆஜர்படுத்தினர்.
இந்நிலையில் நீதிபதியின் உத்தரவின் பேரில் அவர் இன்று கும்பகோணத்திலுள்ள கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது திருமகள் சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி ஐயப்பன் விசாரித்தார்.
அப்போது திருமகளுக்கு திருச்சியில் உள்ள சிலை திருட்டு தடுப்பு காவல் நிலையத்தில் ஆஜராகும்படி நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.