அரசு பேருந்து எரிப்பு வழக்கில் தொல். திருமாவளவன் விடுதலை!
விழுப்புரம்: அரசு பேருந்து எரிப்பு வழக்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனை விடுதலை செய்து விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் கடந்த 2000ஆம் ஆண்டு மூன்று தலித் இளைஞர்கள் கொலை செய்யப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம், லிங்காரெட்டிப்பாளையம் அருகே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது அவ்வழியாக வந்த அரசு பேருந்தை மர்ம நபர்கள் சிலர் தீ வைத்துக் கொளுத்தினர். அப்பேருந்து நடத்துனர் அளித்த புகாரின் பெயரில் பேருந்து எரிக்க தூண்டியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் உள்ளிட்ட 18 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விழுப்புரம் உதவி அமர்வு நீதிமன்றத்தில் 14 ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அரசு தரப்பில் ஆஜர்படுத்தப்பட்ட 16 சாட்சிகளில் 7 பேர் பிறழ் சாட்சியமாக மாறியநிலையில் எஞ்சியோர் அளித்த சாட்சியம் குற்றத்தை நிரூபிக்க போதுமானதாக இல்லை என்று கூறி திருமாவளவன் உள்ளிட்ட 18 பேரை வழக்கில் இருந்து விடுவிப்பதாக நீதிபதி அறிவித்தார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், வாய்மையே வெல்லும் என்பதற்கு ஏற்ப நீதிமன்றம் என்னை நிரபராதி என்று கூறி விடுவித்துள்ளது. பொய் வழக்கு போடுவதனால் காவல்துறையின் நேரம், நீதித்துறையின் நேரம், அரசு பொருளாதாரம் ஆகியவற்றை வீணாக விரயமாகிறது. பொய் வழக்கு போடுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும், தண்டிக்கவும் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும்.
திரைப்படங்களில் சாதி சார்ந்த வசனங்களை வைப்பதும் சாதியை தூண்டும் விதமாக காட்சிகளை வைப்பதும் படத்தை ஓட வைக்க வேண்டும் என்பதற்காக இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்கள் கையாளும் உக்தி. கொம்பன் படம் குறிப்பிட்ட சாதி பெருமையை உயர்த்தி பேசுவதாக உள்ளது. சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் அந்த காட்சிகளை அரசு நீக்க வேண்டும் என்றார்.