கல்வியை காவிய மயமாக்க மத்திய அரசு முயற்சி.. திருமாவளவன் குற்றச்சாட்டு
பண்ருட்டி: கல்வியை காவிய மயமாக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. இந்தியை எந்தவகையில் கொண்டுவந்தாலும் அதை எதிர்ப்போம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தல் பிரசாரத்தின்போது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக பாமக நிறுவனர் ராமதாஸ், திருமாவளவன் உள்ளிட்டோர் மீது பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக இன்று பண்ருட்டி கோர்ட்டில் திருமாவளவன் ஆஜரானார். பின்னர் இந்த வழக்கு விசாரணையை நீதிபதி கணேஷ் வருகிற 1-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.
கோர்ட்டில் ஆஜராகி விட்டு வெளியே வந்த திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், தமிழக அரசின் குழப்பமான நிலைப்பாட்டால் மாணவர்கள் மருத்துவம் படிக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பிளஸ்-2 தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகள் கூட நீட் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை.
நீட் தேர்வை தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் மத்திய அரசு செவிசாய்க்கவில்லை. ஜனாதிபதி தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் ராம்நாத் கோவிந்துக்கு தாமாக முன்வந்து அ.தி.மு.க.ஆதரவு அளித்துள்ளது. தமிழக அரசின் இந்த முடிவு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் ராம்நாத் கோவிந்துக்கும், எதிர்கட்சிகள் சார்பில் போட்டியிடும் மீரா குமாருக்கும் இடையே நிறைய வேறுபாடுகள் உள்ளது. ராம்நாத் கோவிந்து ஆர்.எஸ்.எஸ்.தொண்டர், ஆனால் மீராகுமார் ஜனநாயக சிந்தனையாளர் எனவே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் மீரா குமாருக்கு நிதீஷ் குமார் மற்றும் அ.தி.மு.க. ஆதரவு அளிக்க வேண்டும்.
கல்வியை காவிய மயமாக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. இந்தியை எந்தவகையில் கொண்டுவந்தாலும் அதை எதிர்ப்போம். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.