ஏழு தமிழர் விடுதலையை வலியுறுத்தும் பேரணியில் பங்கேற்போம்.. திருமாவளவன்
சென்னை: 25 வருடமாக சிறையில் வாடி வரும் ஏழு தமிழரையும் விடுதலை செய்வதற்கான அறிவிப்பை தமிழக அரசு செய்த பிறகும், அவர்கள் விடுதலை செய்யப்படாமல் இருப்பது அநீதியாகும். மத்திய அரசின் இத்தகைய தமிழர் விரோதப் போக்கை கண்டித்தும், ஏழு தமிழரை விடுவிக்க வலியுறுத்தியும் நடைபெறுகிற வாகனப் பேரணியில் பங்கேற்போம் என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
கடந்த 25 ஆண்டுகளாக சிறைச்சாலையில் வாடிவரும் பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட ஏழு தமிழரை விடுதலை செய்யக்கோரி, ஏழு தமிழர் விடுதலைக்கான கூட்டியக்கம் சார்பில், நாளை வேலூர் சிறை அருகில் தொடங்கி சென்னை கோட்டை நோக்கி நடைபெறவுள்ள மாபெரும் வாகனப் பேரணியில் விடுதலைச் சிறுத்தைகளும் பங்கேற்கிறது.
ஏழு தமிழர் விடுதலை என்பது விடுதலைச் சிறுத்தைகளின் நீண்டநாள் கோரிக்கையாகும். அதற்காக நடைபெற்ற அத்தனை போராட்டங்களையும் விசிக ஆதரித்து பங்கேற்று வந்துள்ளது. அந்த வகையில் இந்த அறப்போராட்டத்தையும் ஆதரிக்கிறது.
இப்போராட்டத்தில் குறிப்பாக, வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மற்றும் சென்னை மவட்டங்களைச் சோர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் பெருவாரியாகப் பங்கேற்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்ய வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னரும், அதை பொருட்படுத்தாமல், தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மாறாக மத்திய அரசு நடந்து வருகிறது. ஏழு தமிழரையும் விடுதலை செய்வதற்கான அறிவிப்பை தமிழக அரசு செய்த பிறகும், அவர்கள் விடுதலை செய்யப்படாமல் இருப்பது அநீதியாகும்.
மத்திய அரசின் இத்தகைய தமிழர் விரோதப் போக்கை கண்டித்தும், ஏழு தமிழரை விடுவிக்க வலியுறுத்தியும் நடைபெறுகிற வாகனப் பேரணியில் பங்கேற்போம் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.