திருமாவளவன் சிதம்பரம் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்: வெற்றி நடனம் ஆட வாய்ப்பு கிடைக்குமா?
சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறார்.
சிதம்பரம்: மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தொகுதியில் போட்டியிடுகின்றன. இதில், சிதம்பரம் தொகுதியில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் களமிறங்குகிறார்.
பெரம்பலூர் மாவட்டம் அங்கனூரைச் சேர்ந்தவர் திருமாவளவன் (57). 1990களில் தலித் தலைவராக அடையாளம் காணப்பட்ட இவர், 1999 தேர்தலில் போட்டியிட்டதன் மூலம் அரசியலில் நுழைந்தார். தொடக்கத்தில் வேதியியல் படித்த திருமாவளவன், மெட்ராஸ் சட்டக் கல்லூரியில் சட்டம் படிப்பதற்கு முன்பாக குற்றவியல் பாடத்தில் முதுகலை பட்டம் படித்தவர்.
தலித் சிறுத்தைகள் என்னும் தலித் இயக்கத்தின் தமிழகப் பிரிவை உருவாக்கிய மலைச்சாமி என்பவர் கொலை செய்யப்பட்டபோது, மதுரை தடய அறிவியல் துறையில் பணியாற்றிக்கொண்டு இருந்த தொல். திருமாவளவன் மதுரையில் மலைச்சாமிக்கு நினைவேந்தல் கூட்டம் நடத்தினார். அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி அந்த அமைப்பின் அமைப்பாளாரானார்.
தலித் சிறுத்தைகள் அமைப்பிற்கு விடுதலைச் சிறுத்தைகள் எனப் பெயர் மாற்றிய திருமாவளவன் நீலம் மற்றும் சிவப்பு வண்ணப் பட்டைகளும் விண்மீனும் கொண்ட கொடியை அந்த இயக்கத்திற்காக வடிவமைத்தார். 1990ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் நாள் மதுரையில் அக்கொடியை ஏற்றினார்.
விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம் தேர்தலில் ஈடுபட முடிவு செய்தபோது, அரசு தடவியல் துறையில் அறிவியல் உதவியாளராக பணியாற்ற துவங்கிய திருமா, தேர்தலில் போட்டியிடுவதற்காக தன் அரசுப் பணியை ராஜினாமா செய்தார். இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை.
1999 மற்றும் 2004 தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினர். பின்னர் 2009ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினரானார்.
தொடர்ந்து சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டு வரும் திருமாவளவன், இம்முறையும் திமுக கூட்டணி வேட்பாளராக போட்டியிடுகிறார். ஆனால், இந்தத் தொகுதியில் அவர் சுயேட்சை சின்னத்தில் தான் களமிறங்குகிறார்.
சிதம்பரம் மக்களவைத் தொகுதியைப் பொறுத்த வரை, இதுவரை அங்கு காங்கிரஸ் 6 முறையும், தி.மு.க 3 முறையும், பா.ம.க 3 முறையும், விடுதலைச் சிறுத்தைகள் (திமுக கூட்டணி) 1, அ.தி.மு.க 1 முறையும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.